Tamilnadu

ஆம்னி பேருந்துகள் சென்னையின் 3 இடத்தில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் - போக்குவரத்து ஆணையர் அறிக்கை !

முத்தமிழறிஞர் கலைஞரால் சென்னை நகரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை நகரின் மையமாக கோயம்பேடு மாறிய நிலையில், முக்கிய பண்டிகை நாட்களில் அந்த பகுதியில் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்துக்கு “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” என பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில், இந்த பேருந்து நிலையத்தை குறித்து பல்வேறு அவதூறுகள் வெளிவந்தன. அதோடு ஆம்னி பேருந்துகள் இயக்கம் குறித்த சர்ச்சையும் வெளிவந்தது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து ஆணையர் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், "தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் 09.02.2024 தேதியிட்ட இடைக்கால உத்தரவினை எதிர்த்தும் அதனடிப்படையில் போக்குவரத்து ஆணையர் கடந்த 13.02.2024 அன்று வெளியிட்ட ஒரு விரிவான பத்திரிக்கைச் செய்தியை எதிர்த்தும், கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரண்டு ஆணைகளை எதிர்த்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று மாண்பமை உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன்மூலம் கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரு உத்தரவுகளும், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் 09.02.2024 தேதியிட்ட இடைக்கால உத்தரவும் மற்றும் போக்குவரத்து ஆணையரால் 13.02.2024 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கைச்செய்தியும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் உறுதி படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் கீழ்க்கண்ட 3 இடங்களை தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என அறிவிக்கப்படுகிறது:

1. சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி

2. சென்னை புறவழிச்சாலையில் சூரப்பட்டு சுங்கச்சாவடி

3. கிளாம்பாக்கம் பேருந்து முனையம்

மேற்கண்ட 3 இடங்களை தவிர தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதி இல்லை என்பது மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையிலும் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் எக்காரணம் கொண்டும் மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களை தங்களது பயணச்சீட்டு முன்பதிவு மென்பொருளிலும், Red Bus, Abhi Bus. உள்ளிட்ட செயலிகளிலும் பொதுமக்களை குழப்பும் வகையில் பதிவிடக்கூடாது எனவும் அவ்வாறு பதிவு செய்தால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் எச்சரிக்கப்படுகிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும்.இதனை மீறி செயல்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி" என்று கூறப்பட்டுள்ளது.