Tamilnadu

மாநிலம் முழுவதும் நாளை 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு !

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், "17/02/2024 (சனிக்கிழமை) 18/02/2024 (ஞாயிறு) திங்கட்கிழமை முகூர்த்தம் ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு மற்றும் 16/02/2024 வெள்ளிக்கிழமை அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் 16/02/2024 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூரிலிருந்தும் பிற இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 750 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது . இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 9,679 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் இதில் சனிக்கிழமை 5,468 மற்றும் ஞாயிறு அன்று 8,481 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.ச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: நீதிபதியாகும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்... திராவிட மாடல் ஆட்சியின் மகுடம் - ஆர்.எஸ்.பாரதி அறிக்கை !