
“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவின் காரணம் என்ன? இனி நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான தங்களது பதில்களையும், கருத்துக்களையும் என்னிடம் கூறுங்கள்” என்று பொதுமக்களுக்கும் கழகத்தினருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து ‘உடன்பிறப்பின் குரல்’ என்ற சிறப்பு இணையதளம் தொடங்கப்பட்டு, அதில் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மே 31ஆம் நாளுக்குள் அனைவரும் தங்களது கருத்துகளை இணையதளம் வழி பதிவிடுமாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு,
“அன்பு உடன்பிறப்புகளே,
http://udanpirapinkural.in இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன்.
எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை http://udanpirapinkural.in இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”






