Tamilnadu

விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி : திரண்டு வரும் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள்!

தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். மதுரையைச் சேர்ந்த இவர், 90-களில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க கட்சியைத் தொடங்கி அரசியலில் கால்பதித்த இவர், 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தே.மு.தி.க எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற நிலையில், இதனால் 2011 - 2016ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

அதன் பின்னர் இவரது உடல்நிலை பாதிப்பால் அரசியலில் சற்று விலகி இருந்தார். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சையிலிருந்து வந்த அவருக்கு கொரோனா மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து உயிரிழந்த விஜயகாந்த் உடலுக்குப் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், இந்திய சினிமா பிரபலங்களும், கட்சி தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று சென்னையில் உள்ள தே.மு.தி.க கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் நடிகர் விஜய், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் இன்று அதிகாலை பொதுமக்கள் அஞ்சலிக்காகச் சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாலையிலிருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் சென்று விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்திப் பிரியா விடை கொடுத்து வருகிறார்கள்.

இன்று மதியம் 1.30 மணியளவில் தீவுத் திடலிலிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்படும் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்தின் உடல்... நாளை நல்லடக்கம் - முழு விவரம் !