Tamilnadu

பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்தின் உடல்... நாளை நல்லடக்கம் - முழு விவரம் !

தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். மதுரையை சேர்ந்த இவர், 90-களில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தார். ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் உள்ளிட்டவர்களுக்கு கூட 100-வது படம் தோல்வியையே கொடுத்தது

ஆனால் 1991-ல் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'கேப்டன் பிரபாகாரன்' இவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. 300 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு சாதனை படைத்தது. திரையுலகம் மட்டுமின்றி அரசியலிலும் இவர் சிறந்த தலைவராக பெயர் பெற்றுள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க கட்சியைத் தொடங்கி அரசியலில் கால்பதித்த இவர், 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் 2011ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தே.மு.தி.க எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற நிலையில், இதனால் 2011 - 2016ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

அதன்பிறகு அரசியலில் இவர் இருந்தாலும், தேர்தலில் வெற்றிபெறவில்லை. தொடர்ந்து இவரது உடல்நிலை பாதிப்பால் அரசியலில் இருந்தே சற்று விலையிருந்தார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த இவருக்கு 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார். எனினும் அவ்வப்போது இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த இவர், 2 வாரங்களுக்கு பின்னர் வீடு திரும்பினார். ஆனால் வீடு திரும்பிய 2 வாரத்திற்குள்ளேயே கொரோனா பாதிப்பு மற்றும் நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டவையால் இன்று காலை காலமானார்.

இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நாளை தீவுத்திடலில் இவரது உடல் வைக்கப்படவுள்ளதாக தேமுதிக சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பு பின்வருமாறு :

"தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று (28.12.2023) காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.

கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது.

கேப்டன் அவர்களின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது."

Also Read: சிவாஜி TO கமல்... யாரும் பிடிக்காத இடத்தை பிடித்த விஜயகாந்த் : 100-வது படத்தில் கிடைத்த 'கேப்டன்' பட்டம்!