Tamilnadu

"1,100 திருமணங்கள் நிறைவு - “ரூ.50,000 மதிப்பில் சீர் வரிசைகள்” : இந்து சமய அறநிலையத் துறை அசத்தல் !

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (24.11.2023) சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வை நிறைவு செய்திடும் விதமாக, இரண்டு மணமக்களுக்கான திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைத்தல் 2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், “ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தைத் திருக்கோயில்களே ஏற்கும்“ என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் 4.12.2022 அன்று சென்னை இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட திருக்கோயில்கள்தசார்பில் 25 மணமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மொத்தம் 500 மணமக்களுக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. மேலும், திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்ட திட்டச் செலவினத் தொகையை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.

2023-2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், “பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் பொன் தாலி உட்பட ரூ.50,000/- மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு திருக்கோயில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவ்வாண்டு கூடுதலாக மேலும் 100 இணைகளைச் சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 இணைகள் வீதம் 600 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக திருமண விழா நடத்தி வைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் 7.7.2023 அன்று சென்னை, அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், 34 மணமக்களுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து சென்னையில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் தலைமையிலும், பிற மாவட்டங்களிலும் திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள் நடத்தப்பட்டன.

இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 2022 – 2023 ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 500 திருமணங்களும், 2023 – 2024 ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 600 திருமணங்களில் 564 திருமணங்களும், ஆகமொத்தம் 1,064 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் திருக்கோயில்கள் சார்பில் பிற மாவட்டங்களில் 34 மணமக்களுக்கும், சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 2 மணமக்களுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு மொத்தம் 1,100 திருமணங்கள் நிறைவு பெற்றுள்ளன.

Also Read: “22 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்.. ரூ.10 லட்சம் மதிப்பிலான சீர் வரிசைகள்”: அசத்தும் இந்து அறநிலையத்துறை!