Tamilnadu

தமிழ்நாட்டு மீனவர்களும் இந்திய மீனவர்கள்தான் : ஒன்றிய அரசை வெளுத்து வாங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

2023-24 ஆம் ஆண்டிற்கான மீன்பிடி குறைவு கால சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 2.11 லட்சம் கடல் மீனவர்கள் மற்றும் 2.06 லட்சம் மீனவ மகளிருக்கு என அரசின் பங்குத் தொகை ரூ. 125.17 கோடியை நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி முதற்கட்டமாக 30 மீனவர்கள் மற்றும் மீனவ பெண்களுக்கு நிவாரண தொகை வழங்கும் நிகழ்வைச் சென்னை நந்தனத்தில் உள்ள மீனவர் நலத்துறை அலுவலகத்தில் துறையின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "நடப்பு ஆண்டிற்கான மீனவர்களுக்குச் சேமிப்பு நிவாரண திட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளோம். 11 மாவட்டங்களில் இந்த திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி முதல் படிப்படியாக விரிவாக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடலோர மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஒன்றிய அரசு அனுமதி பெற்று மூன்று மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும்.

மீனவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப புதிய தூண்டில் வளைவுகள் அமைக்க எதிர்ப்பு வந்தாலும் சட்டப் போராட்ட மேற்கொண்டு நடைமுறைப்படுத்தப்படும். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளை விடுவிக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால் படகுகளை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மீனவர்கள் நிலை புரியாமல் ஒன்றிய அரசு அவர்களை ஏமாற்றி வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களும் இந்திய மீனவர்கள்தான் என்பதை ஒன்றிய அரசு மறந்து விடுகிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ரூ.350 கோடி முறைகேடு - அதிரடி உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் : சிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்!