Tamilnadu

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கு : இளைஞர் செய்த நெகிழ்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

சாலையில் சக மனிதர்கள் விபத்தில் படுகாயம் அடைந்து இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யவே பலர் தயங்கும் நிலையில், உயிருக்குப் போராடிய குரங்கிற்கு, இளைஞர் ஒருவர் தன் மூச்சுக் காற்றைக் கொடுத்து முதலுதவி செய்து உயிரை காப்பாற்றியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி மலைப்பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி கலா ராணி. இந்த தம்பதியின் இரண்டாவது மகன் நிதீஷ் குமார். இந்நிலையில் இவர்களது வீட்டின் முன்பு இருந்த மரத்தின் மீது நேற்று இரவு இரண்டு குரங்குகள் சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளது.

அப்போது ஒரு குரங்கு மரத்திலிருந்து தவறி கீழே விழும் போது, அந்த வழியாக இருந்த மின்சார கம்பி மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து கீழே விழுந்த குரங்கு எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளது.

இதைப்பார்த்த நிதீஷ்குமார் உடனே குரங்கின் நெஞ்சுப் பகுதியை தன் கைகளால் அழுத்து, தன் மூச்சுக் காற்றைக் குரங்கின் வாய்வழியாகச் செலுத்தி முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே குரங்கு கண்விழித்து அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றது. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி குரங்கின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் நிதீஷ்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read: AFGvsPAK : மைதானத்தில் உச்சம் தொட்ட கொண்டாட்டம் ! துப்பாக்கி வெடித்து கொண்டாடிய ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் !