Tamilnadu

கற்களை வீசி அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் : அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தது போலிஸ்!

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கானத்தூர் காவல் நிலைய எல்லை பகுதியில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அண்ணாமலை வீட்டு காம்பவுண்ட் சுவர் முன்பாக பொது இடத்தில் சுமார் 45 அடி உயரமுள்ள பா.ஜ.க கட்சியின் கொடிக்கம்பம் ஒன்று முன் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறாகவும், உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மிக அருகில் உயிருக்கு ஆபத்தான வகையில் அமைக்கப்பட்டது.

மேலும் சென்னை மாநகராட்சியில் அனுமதி பெறாமல் ஆபத்தான முறையில் பொது இடத்தில் அமைக்கப்பட்ட கொடிக் கம்பத்தைச் சென்னை பெருநகர நகராட்சியினரும், போலீசாரும் அகற்ற முடிவு செய்து, அதனை பா.ஜ.க கட்சியினருக்கு தெரியப்படுத்தி இரவு 8 மணிக்குக் கொடிக்கம்பத்தை அகற்ற முற்பட்டனர்.

அப்போது, பா.ஜ.க துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் சுமார் 110 பேர் அரசுக்கு எதிராகக் கோஷமிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இவர்களை போலிஸார் பலமுறை எச்சரித்தும் கேளாமல் தொடர்ந்து அரசு அலுவலர்களிடம் தகராறு செய்துகொண்டிருந்தவர்கள். இதனால் போலிஸார் அவர்களைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டு வந்த JCB இயந்திரத்தைக் கற்களைக் கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்து பொது சொத்துக்குச் சேதம் விளைவித்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் பா.ஜ.க மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி , கன்னியப்பன், பாலமுருகன், செந்தில் குமார்,சுரேந்திர குமார், வினோத்குமார் உள்ளிட்ட 6 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

Also Read: உலக பட்டினிக் குறியீட்டை கேலி செய்த ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் ஸ்மிருதி இரானி : கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!