Tamilnadu

இஸ்ரேல் - தமிழர்களை மீட்க நடவடிக்கை.. அவசர உதவி எண்கள் e-mail அறிவித்த தமிழ்நாடு அரசு !

பாலஸ்தீனத்தில் உள்ள போராளி அமைப்புகளுக்கும், இஸ்ரேலுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாலஸ்தீனத்தில் இருக்கும் காசா பகுதியில் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி பெரும் சண்டை நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்த மோதல் தற்போது மீண்டும் வெடித்துள்ளது.

அதன்படி இன்று காலை பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வலுவுடன் இருக்கும் ஹமாஸ் என்ற அமைப்பு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர், தெற்கு மற்றும் மத்திய பகுதியில் தங்களது தாக்குதலை மேற்கொண்டுள்ளது. 20 நிமிடங்களில் சுமார் 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் ஏவப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதியில் போர் பதற்றம் நிலவியுள்ளது. மேலும் ஹமாஸ் படையினர், இஸ்ரேலுக்குள் ஆயுதத்துடன் அத்துமீறி ஊடுருவியுள்ளதாகவும் அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நாட்டினர் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் பிரகடனத்தை அறிவித்துள்ளனர். இதனால் காசா பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு 'Operation Iron Swords' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த போர் தாக்குதலில் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் படுகாயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் 2 நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து இந்த போர் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதோடு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 22 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 35 இஸ்ரேலிய இராணுவ வீரர்களை ஹமாஸ் படையினர் பிடித்து வைத்துள்ளனர். அதோடு இஸ்ரேல் காசா மீது பதில் தாக்குதல் நடத்தியதில் 161 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் இஸ்ரேலில் இருக்கும் தமிழர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அங்கிருக்கும் தமிழர்களுக்கு நமது தமிழ்நாடு அரசின் அவசர உதவி எண்கள் மற்றும் மெயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Helpline Nunmbers and e-mail ids:

+91-87602 48625; +91-99402 56444; +91-96000 23645. - nrtchennai@tn.gov.in - nrtchennai@gmail.com - ஆகும்.

மேலும் இஸ்ரேலில் இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 15 நபர்கள், அயலக தமிழர் நலவாரியத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தாங்கள் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதோடு போர் தீவிரமடைவதால் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை விடுத்த 15 நபர்களும் இஸ்ரேலின் ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணி செய்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.மேலும் இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் அயலகத் தமிழர் நல வாரியத்தை தொடர்பு கொண்டால் தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.