Tamilnadu

10 வயதில் காணாமல் போன சிறுமி.. 21 ஆண்டுக்குப் பின் பெற்றோர்களுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தருமபுரி மாவட்டம் பெண்டேனள்ளி புதூரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி மாதம் மாள். இந்த தம்பதியின் மகள் ரம்யா. இவர் பிறந்தது முதலே வாய் பேச முடியாது மற்றும் காதுகேட்காத மாற்றுத்திறனாளி. இதனால் பெற்றோர்கள் ரம்யாவை காது கேளாதோர் வாய் பேச முடியாதோர் தனியார் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

இப்பள்ளியிலிருந்து 2022ம் ஆண்டு ரம்யா உள்ளிட்ட சில குழந்தைகள் கர்நாடக மாநிலம் மைசூருக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ரம்யா இவர்களிடம் இருந்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து ரம்யாவை அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இருப்பினும் அவர் கிடைக்காததால் தேடுதல் முயற்சியைக் கைவிட்டுள்ளனர்.

மேலும் ரம்யா கையில் பச்சை குத்தியுள்ள அடையாளங்கள் கொண்டு படங்களைப் பல மாநிலங்களுக்கு அனுப்பியும் தேடிப் பார்த்துள்ளனர். நாட்கள் வாரங்களானது. வாரங்கள் மாதங்களானது. மாதங்கள் வருடங்களானது. இப்படி வருடங்கள் சென்று கொண்டே இருந்ததே தவிர ரம்யா குறித்து எந்த தகவலும் அவரது குடும்பத்திற்குக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வாய் பேச முடியாத தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மும்பையில் உள்ளதாகச் சென்னையில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் அமைப்பிற்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்த பெண்ணின் புகைப்படத்தையும் அனுப்பிவைத்துள்ளனர்.

இதையடுத்து இவர்கள் இந்த புகைப்படத்தைத் தமிழ்நாடு முழுவதும் அனுப்பி விசாரணை செய்தனர். அப்போது தருமபுரியில் 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமியாக அவர் இருக்கலாம் என நினைத்து அவரது பெற்றோரை அழைத்து புகைப்படத்தைக் காண்பித்துள்ளனர்.

அப்போது 21 வருடங்களுக்கு முன்பு சுற்றுலா சென்றபோது காணாமல்போன ரம்யாதான் என்பது உறுதியானது. பின்னர் காது கேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் அமைப்பினர் மும்பை சென்று ரம்யாவை மீட்டு தருமபுரிக்கு அழைத்து வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பெற்றோர்களை 21 வருடங்களுக்குப் பிறகு மகள் பார்த்துக் கண்கலங்கி அவர்களை கட்டி தழுவிக்கொண்டது அங்கிருந்தவர்களை நெகிழவைத்தது.

மேலும் ரம்யாவின் கையில் சிறுவயதாக இருக்கும் போது பச்சை குத்திய தமிழ் எழுத்துக்களே தற்போது அவரை பெற்றோர்களிடம் இணைவதற்கு உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!