Tamilnadu

”என்னை வெட்டி கூறு போட்டாலும் நான் உண்மையை சொல்லியே தீருவேன்” : கொடநாடு வழக்கில் ஆஜரான தனபால் பேட்டி!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொநாடு, கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த தனபால், "கொடநாடு வழக்கில் யார் யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது? என்ன நடந்தது என்று உயிரிழப்பதற்கு முன்பாக எனது தம்பி கனகராஜ் என்னிடம் கூறியுள்ளார். அந்த உண்மையை நான் சி.பி.சி.ஐ. டி அதிகாரிகளிடம் சொல்ல உள்ளேன்.

கொடநாடு சம்பவத்திற்குப் பிறகு சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமியின் மச்சான் வெங்கடேஷ், சேலம் இளங்கோவன் ஆகியோர் எனது தம்பியிடம் பேரம் பேசியுள்ளனர். ஆனால் அவர்கள் சொன்னது போல் பணம் தரவில்லை. கனகராஜையும் தாக்கியுள்ளனர்.‌ மேலும் மதுவில் விஷம் கலந்து கொலை செய்யவும் சதி செய்துள்ளனர்.

இதில் தப்பித்த எனது தம்பியை மீண்டும் அத்தூரில் இளங்கோவன் பணம் தருவதாக அழைத்துச் சென்று தென்னந்தோப்பில் மது அருந்தவைத்து, அதிக போதை ஏற்றிவிட்டு விபத்தில் பலியானது போல் சாலையில் வீசி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை நான் அப்போதிலிருந்தே சொல்லி வருகிறேன். ஆனால் இதற்கு நியாயம் கிடைக்கவில்லை. இன்று சி.பி.சி.ஐ.டி மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

எனது தம்பி எடுத்து வந்த சூட்கேஸில் இருந்த ஆவணங்களை நான் திறந்து பார்க்கவில்லை. 5 பைகளில் 3 சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி மச்சான் வெங்கடேஷிடமும், 2 பேக் சேலத்தில் ஆத்தூர் இளங்கோவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொடநாடு வழக்கின் முக்கிய குற்றவாளிகள் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அன்பரசன், சஜீவன், அனுபவ் ரவி, கப்பச்சி வினோத், அத்தூர் இளங்கோவன் ஆகியோர் தான்.

ஏற்கனவே என்னிடம் ஊட்டியில் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சேலத்தில் சுதாகர் தலைமையில் விசாரணை நடந்தது. ஏ.டி.எஸ்.பி கிருஷ்ண மூர்த்தி, ஐஜி சுதாகர் ஆகியோர் என்னைக் கடுமையான முறையில் தாக்கினர். இந்த வழக்கில் ஜ.ஜி சுதாகரிடமும் விசாரணை நடத்த வேண்டும். மேலும்

சேலம் எஸ்பி, ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா, எடப்பாடி ஆய்வாளர் சுரேஷ்குமார், எஸ்.பி.சி.ஐடி முத்து மாணிக்கம் இவர்களிடமும் விசாரணை செய்தால் எல்லாம் உண்மையும் வெளியே வரும். 2017 க்கு பிறகு கொநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சொத்து மதிப்பு உயர்வு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கவனிக்க வேண்டும்.

சி.பி.சி.ஐ.டி விசாரணையில் அனைத்தை உண்மைகளையும் சொல்வேன். விசாரணைக்கு ஒத்துழைக்க நான் தயார். எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து 2 ஆயிரம் கோடி தருவதாக ஆத்தூர் மணி என்பவர் மூலம் பேரம் பேசினார்கள். நான் உண்மை கண்டறியும் சோதனைக்கும் தயார் . என்னை வெட்டி கூறு போட்டாலும் எதற்கும் தயாராக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: "உப்பு சப்பு இல்லாத சனாதனத்தை கையில் எடுத்து உலறிவரும் அண்ணாமலை"... அமைச்சர் சேகர்பாபு பதிலடி!