Tamilnadu

திருச்சி: ரோந்து பணியின்போது உயிரிழந்த காவலர்.. குடும்பத்தை நேரில் சந்தித்து நிவாரண நிதியளித்த முதல்வர் !

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீதர் (45). இவர் கடந்த ஜூலை 30-ம் தேதி அரிஸ்டோ இரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதி விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டார். இந்த நிலையில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு, இன்று சென்னை திரும்பும் வழியில் உயிரிழந்த காவலர் ஸ்ரீதர் குடும்பத்தை நேரில் வரவழைத்து ருக்கு.25 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், " திருச்சி மாநகர், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (வயது 45) கடந்த 30-7-2023 அன்று அரிஸ்டோ இரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் காயமுற்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தலைமைக் காவலர் ஸ்ரீதர் அவர்களின் குடும்பத்தினருக்கு 25 இலட்சம் ரூபாய்க்கான நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பும் வழியில், இன்று (27.08.2023) திருச்சி விமான நிலையத்தில், ரூபாய் 25 இலட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை மறைந்த தலைமைக் காவலர் ஸ்ரீதர் அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “எந்த சலசலப்புக்கும் அஞ்சி நடுங்கும் கட்சி அல்ல திமுக..”: மேடையில் எச்சரிக்கை விடுத்து பேசிய முதலமைச்சர்!