Tamilnadu

தமிழில் குடமுழுக்கு கோரியவர்கள் மீது தாக்குதல்.. பாஜக IT பிரிவு மாவட்ட தலைவர் உட்பட 2 பேர் அதிரடி கைது !

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி மலை மீது அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோவில் ராஜகோபுர குடமுழுக்கு வியாழக்கிழமை (நேற்று) நடைப்பெற்றது .இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் கும்பாபிஷேக பணிகள் ஓசூரை சேர்ந்த பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி, 11 நதிகளின் நீர் தெளித்து பிரம்மாண்டமான முறையில் குடமுழுக்கு கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டுமென தமிழ் தேசிய பேரியக்கத்தை சேர்ந்தவர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் நேற்றைய முன்தினம் மனு அளித்துள்ளார். இதையறிந்த ஒரு கும்பல் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாரிமுத்து உள்ளிட்டோர் ஒசூர் நகர போலிசில் புகார் அளித்திருந்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பை சேர்ந்த 5 பேர் தான் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.. இதையடுத்து ஓசூர் நகர பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்த மஞ்சுநாத் என்பவரையும், பார்வதி நகரை சேர்ந்த வினோத் என்பவரையும் போலிசார் கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பாக விஎச்பி கிரண், பாஜக முருகன், ஆதி ஆகிய மூன்று பேரை போலிசார் தேடி வருகின்றனர். பாஜகவினர் கைதை தொடர்ந்து ஒசூர் நகர காவல்நிலையத்தில் நூற்றுக்கும் அதிகமான பாஜகவினர் குவிய தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒசூர் மாநகர பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டதால், பாஜகவினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: துப்பாக்கியால் சுடப்பட்ட பீம் ஆர்மி தலைவர்.. உ.பியில் மற்றொரு அதிர்ச்சி.. எப்படி இருக்கிறார் ஆசாத் ?