Tamilnadu

தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்த அவதூறு பதிவு.. பாஜக நிர்வாகி கைதுக்கு பின் சிறையில் அடைப்பு !

தூத்துக்குடி, சுந்தரவேல் புரம் 2வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி ராஜ், இவர் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இவர் தனது மொபைலில் அந்தோணி கண்ணன் என்ற முகநூல் பக்கத்தை பயன்படுத்தி வருவதாகவும், இன்று காலை 9 மணிக்கு தனது நண்பருடன் கேடிசி நகர் அருகில் உள்ள டீக்கடையின் அருகில் நின்று கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய முகநூல் பக்கத்தை பார்த்துள்ளார்.

அப்போது பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியை சேர்ந்த செல்வ பாலா செல்வா என்பவரது முகநூல் பக்கத்தில் காவல் நிலைய அறையில் டேபிளின் பின்புறம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை உடையில் நின்று கொண்டிருப்பது போலவும், அவருக்கு முன்னால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் தொழிலதிபர் சபரி ஆகியோர் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக உள்ள கைகட்டி நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். மேலும் அதற்கு கமெண்டில் அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம் மொத்த திராவிடியான்கள் கதறல் என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் பிஜேபி கட்சிக்கும் திராவிட கட்சிக்கும் இடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என மேற்படி புகைப்படத்தை பதிவேற்றம் செய்த நபரின் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சிப்காட் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் ரூரல் டிஎஸ்பி சுரேஷ் உத்தரவின் அடிப்படையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில், உதவி ஆய்வாளர் வசந்த் குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தூத்துக்குடி அம்மன் கோவில் தெருவை சார்ந்த பாஜக தகவல் தொழில்நுட்ப அணி சேர்ந்த செல்வபாலன் (29), எலக்ட்ரீசியன் ஆன இவரை கைது செய்து செக்சன் 153, 153(A)(1)(A), 505(1)(b), 504 IPC, 67(A) IT Act ஆகிய 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி ஜெ. எம்.3 நீதிபதி சேரலாதன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து செல்வ பாலனிடம் விசாரணை நடத்திய நீதிபதி சேரலாதன் விசாரணையின் அடிப்படையில் செல்வபாலனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி பேரூரணி சிறையில் அருகில் அடைக்கப்பட்டார்.

Also Read: ”இனி எங்களிடம் அனுமதி பெற வேண்டும்”.. ஒன்றிய அரசின் அமைப்பான CBI-க்கு செக் வைத்த தமிழ்நாடு அரசு!