Tamilnadu

விவசாயிகள் நலன் காக்க இந்த அரசு எந்நாளும் தொடர்ந்து பாடுபடும்.. மேட்டூர் அணையை திறந்து முதலமைச்சர் உறுதி!

சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்வு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 10.6.2023 அன்று மாலை சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 11.6.2023 அன்று காலை சேலம் மாநகரில் உள்ள பேரறிஞர் அண்ணா பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார்.

பின்னர் சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை சேலம் மாவட்டம், மேட்டூர் செல்லும் வழியில், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், கோனூர் ஊராட்சியில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியை உயர்த்துவதற்காகவும் விவசாயிகளின் வாழ்வு மேம்படவும் நாம் சிறந்த பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உழவர் நலன் சார்ந்த திட்டங்களை வெற்றிகரமாக இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மேட்டூர் அணை குறிப்பிட்ட நாளான ஜூன் 12 ஆம் தேதி திறந்து வைத்து வருகிறேன். குறிப்பிட்ட நாளில் திறந்து வைத்தால் மட்டும் போதாது, கடைமடை வரை காவிரி நீர் சென்றடைய வேண்டியும் திட்டமிட்டோம். அதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டில் ரூ.62.91 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. மேலும் காவிரி நதிநீரை திறம்பட பயன்படுத்தி குறுவை நெல் சாகுபடி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இவ்வரசு ரூ.61.09 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தியது.

இதன் காரணமாக, காவிரி நதிநீர் கடைமடை பகுதி வரைக்கும் சென்று, கடந்த 2021 ஆம் ஆண்டு குறுவைப் பருவத்தில் 4.9 இலட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அதேபோல கடந்த 2022 ஆம் ஆண்டில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த காரணத்தினால், 19 நாட்கள் முன்னதாகவே - அதாவது மே 24ஆம் தேதி அன்றே மேட்டூர் அணையினை திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.

19 நாட்கள் முன்னரே அணை திறந்தாலும் அதற்கு முன்கூட்டியே அனைத்து கால்வாய்களையும் தூர் வாருவதற்கு நீர்வளத்துறை ரூ.80 கோடி மதிப்பீட்டில் அரசு ஆணையினை உரிய காலத்தில் வெளியிட்டு பணிகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. பணியின் தரம் குறித்துஅனைத்துத் தரப்பு விவசாயிகளும் அப்போது பாராட்டு தெரிவித்தனர்.

கடந்த ஆண்டும் காவேரி நதிநீரை திறம்பட பயன்படுத்தி நெல் உற்பத்தியை உயர்த்தும் நோக்கத்தில், ரூ.61.12 கோடி செலவில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. குறுவைப் பருவத்திற்கு தேவைப்படும் குறைந்த வயதுடைய நெல் ரக விதைகள், இரசாயன உரங்கள், உயிர் உரங்கள், பயிர்க்கடன் போன்ற இடுபொருட்களும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வழங்கப்பட்டன.

இதன் விளைவாக கடந்த ஆண்டில் குறுவை நெல் சாகுபடி கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக 5.36 இலட்சம் ஏக்கரை கடந்து, 12.76 இலட்சம் டன் நெல் உற்பத்தி செய்து, சாதனை படைத்தது. நடப்பு ஆண்டில் கோடை பருவத்தில் பெய்த மழையினால்,

டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்தது.மேலும், சென்ற ஆண்டில் மேட்டூர் அணை நீரை மிகவும் கவனமாக பயன்படுத்தியதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர் இருப்பு தற்போது 103.35அடியாக உள்ளது. எனவே மேட்டூர் அணையினை குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி அன்று திறப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது.

நீர்வளத்துறை கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே, டெல்டா பகுதிகளில் கால்வாய்களை தூர் வாரும் பணிகளை மேற்கோண்டது. இதற்கென நடப்பாண்டில் 90 கோடி ரூபாயை அரசு அனுமதித்து இப்பணிகளை ஆய்வு செய்து விரைவாக முடிப்பதற்கு கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, முடுக்கிவிடப்பட்டதால், இப்பணிகள் யாவும் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளன.

இப்பணியின் முன்னேற்றத்தினை சில நாட்களுக்கு முன் நான் தஞ்சாவூருக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.

மேலும், குறுவை நெல் சாகுபடி தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடி உரிய விபரங்களை கேட்டு அறிந்தேன்.

முன்னதாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களும், கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் காவிரி டெல்டா மாவட்ட பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடி குறுவை நெல் சாகுபடியினை மூன்றாவது ஆண்டிலும் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஆணையிட்டிருந்தேன்.

அதன்படி, தற்போது குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான குறைந்த நாள் வயதுடைய நெல் ரக விதைகளும், இரசாயன உரங்களும், உயிர் உரங்களும் அரசு வேளாண்மை விரிவாக்கம் மையங்களிலும், தனியார் கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு உரிய காலத்தில் விநியோகிக்கப்பட்டன.

இதன் காரணமாக நிலத்தடி நீரை பயன்படுத்தி இதுவரை 1.6 இலட்சம் ஏக்கரில் குறுவை நெல்லில் நடவுப் பணி முடிவடைந்துள்ளது. மேலும், சமுதாய நாற்றங்கால் அமைத்து, காவேரி நதிநீர் வந்தவுடன் நடவுப்பணியினை உடனடியாக துவங்கும் வகையில் பணிகள் விரைவாக வேளாண்மை துறையினால் முடுக்கி விடப்பட்டன.

இந்நிலையில் இன்று மேட்டூர் அணையைத் திறந்து வைத்துள்ளேன். இவ்வரசு பதவியேற்று, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இன்று (12.6.2023), மேட்டூர் அணையினை உரிய காலத்தில் அதாவது ஜூன் 12 ஆம் தேதி அன்று நான் திறந்து விடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், பாசன நீரினை டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி இடுபொருட்களை தேவையான அளவு உபயோகித்து, நடப்பு குறுவைப் பருவத்தில் நெல் உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் .

நமது விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ரூபாய் 75.95 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தையும் இன்று நான் அறிவிக்கிறேன்.

குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டம், 2023 என்ற இத்திட்டத்தின் கீழ்,

*ஏக்கருக்கு 45 கிலோ யூரியா,

*50 கிலோ டிஏபி,

*25 கிலோ பொட்டாஷ் என்ற விகிதத்தில், 2.5 இலட்சம் ஏக்கருக்குத் தேவையான இரசாயன உரங்கள் முழு மானியத்திலும்,

*1.24 இலட்சம் ஏக்கருக்குத் தேவையான நெல் விதைகள் 50 சத மானியத்திலும்,

*மாற்றுப் பயிர் சாகுபடிக்காக 15,818 ஏக்கருக்கு மாற்றுப் பயிர் சாகுபடித் தொகுப்பும்,

* 6,250 ஏக்கரில் பசுந்தாளுர விதைகளும்,

* 747 பவர் டில்லர்களும்,

*45பவர் வீடர்களும் மானியத்தில் விநியோகம் செய்வதற்காக, மொத்தம் ரூ.75.95 கோடி மதிப்பில் குறுவை சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

எனவே, இந்த நல்ல வாய்ப்பினை பயன் படுத்திக் கொண்டு காவேரி டெல்டா விவசாயிகள் அனைவரும் பாசன நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி, தேவையான அளவு இரசாயன உரங்களை உபயோகித்து, நெல் சாகுபடியினை மேற்கொள்ளுமாறு நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

தமிழ்நாடு அரசு இன்று அறிவித்த குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினால், நடப்பாண்டில் ஐந்து இலட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை நெல் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் நலன் காக்க இந்த அரசு எந்நாளும் தொடர்ந்து பாடுபடும்" என்று தெரிவித்துக் கொள்கிறேன்

Also Read: ”மூழ்கும் கப்பல் பா.ஜ.க- தமிழ்நாட்டில் ஒரு MP சீட் கூட கிடைக்காது”: அமிஷாவுக்கு டி.ஆர்.பாலு MP பதிலடி !