Tamilnadu

அப்படி என்றால் ஒன்றிய அரசு எப்படி விருது கொடுக்கும்?.. புரியாமல் பேசும் அண்ணாமலை: அமைச்சர் KNநேரு பதிலடி!

சென்னை அயனாவரத்தில் உள்ள குடிநீர் வாரிய பயிற்சி மையத்தில் கழிவு நீரகற்ற, இயந்திரங்களைக் கொண்டு பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் பயிற்சியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, " கழிவுநீர் தொட்டிகளில் ஏற்படும் மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை. கழிவு நீர் தொட்டிகளில் ஏற்படும் விபத்தால் உயிரிழப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் என்ற இழப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சமாகத் தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கி வருகிறது.

தனி நபர்கள் தனியார்கள் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாமல் கழிவு நீர் தொட்டிகளில் தனி நபர்களை இறக்கி சுத்தம் செய்வதால் விபத்து நேரிட்டு உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. கழிவுநீர் ஊர்தி வாகனங்களை இனி உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்து உரிய உரிமம் பெற வேண்டும்.

சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகள் சென்னை மாவட்டத்தில் மழை நீர் வடிகால் கால்வாய்கள் அமைத்து வருகின்றன இவை அனைத்தும் ஒருங்கிணைத்து குழுவாகச் செயல்பட முதலமைச்சர் தலைமையில் விரைவில் கூட்டம் நடைபெற உள்ளது.

ஜலஜீவன் திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தியதற்காக இந்திய அளவில் முதல் மாநிலம் என்ற விருதினை ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசிற்கு வழங்கியுள்ளது.

ஜலஜீவன் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு சரிவரச் செயல்படுத்தவில்லை என அண்ணாமலை குற்றச்சாட்டுகிறார். அப்படியிருந்தால் ஒன்றிய அரசு எப்படி தமிழ்நாடு அரசுக்கு விருது கொடுக்கும். குஜராத் மாநிலத்தில் நன்றாகச் செயல்படுத்தி இருந்தால் ஏன்? குஜராத் மாநிலத்திற்கு வழங்கவில்லை. அண்ணாமலை புரியாமல் பேசிவருகிறார்.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. போதுமான குடிநீர் கையிருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து புதிய குழாய் பாதிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”இந்திய அரசியலின் ராஜதந்திரி முத்தமிழறிஞர் கலைஞர்”.. கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம்!