Tamilnadu

“பெண்களின் பேருந்து பயணம் அதிகரிப்பு; 2 ஆண்டில் 288 கோடி கட்டணமில்லா பயணம்” : அமைச்சர் உதயநிதி பெருமிதம்!

சென்னை ஆர்.ஏ.புரத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு/விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு தொகை, ஈவுத் தொகை, உள்ளிட்ட பணப் பலன்களை 612 பேருக்கு சுமார் 171 கோடி ரூபாய்க்கான காசோலைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில், போக்குவரத்துத்துறை ஒட்டுமொத்தமாக சீரழிந்த நிலையில், தற்போது அதை சீரமைக்கும் வகையில் பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

திராவிட மாடல் ஆட்சிக்கு வந்தவுடன் பே -மெட்ரிக்ஸ் முறையில் ஊதியம் வழங்குவதால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. போக்குவரத்து துறை தொழிலாளர்கள் வகிப்பது பதவி அல்ல, பொறுப்பு என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் சொல்வார். அதற்கு ஏற்ப போக்குவரத்து தொழிலாளர்கள் மக்களுக்கு பொறுப்புமிக்க சேவையை ஆற்றி வருகிறார்கள்.

கடந்த 2 ஆண்டில் 288 கோடி கட்டணமில்லா பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். புதிய அரசு அமைந்துள்ள கர்நாடகாவில் இத்திட்டம் அமலாகியுள்ளது. கட்டணமில்லா பயண திட்டம் அமலாகும் முன்பு அரசு பேருந்தில், பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது , தற்போது 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் , கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “மோடியின் பூதக்கண்ணாடி.. ஒன்றிய அரசின் கனவு தமிழ்நாட்டில் பலிக்காது..” : பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சு !