Tamilnadu

2 ஆண்டுகளில் இந்திய ஒன்றியமே வியக்கும் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தனித்தனி பட்டா வழங்கும் நிகழ்ச்சி நங்கநல்லூரில் நடைபெற்றது.மாவட்ட வருவாய் துறை ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் ஆயிரத்து 136 பேருக்கு பட்டா வழங்கும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கடந்த சட்டமன்ற தேர்தலில் நமது கழகத்தின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட நாள் இன்று. நாம் ஆட்சி அமைத்து இன்னும் சில நாட்களில் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய ஒன்றியமே வியந்து திரும்பிப் பார்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த களஆய்வில் முதலமைச்சர் அவர்கள் முக்கியமாக வலியுறுத்திய விஷயம், இந்த பட்டா வழங்குவது தொடர்பானது தான். நான் பல மாவட்டங்களுக்கு செல்லும்போது எனக்கு வரும் கோரிக்கை மனுக்களில் பட்டா வழங்கக்கோரி வரும் மனுக்கள் தான் அதிகம். எனவே தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து பட்டா வழங்கும் பணிகளை செய்து வருகிறோம்.

இன்றைய காலகட்டத்தில் சென்னை போன்ற இடங்களில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கனவு. அப்படி வாங்க நினைக்கும்போது, பட்டா சரியாக உள்ளதா என்பது தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பட்டா அவசியமானது. அதனை உணர்ந்து, இந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இன்றைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது.

இந்த பட்டா வழங்குவது மட்டுமின்றி சுமார் 25 சேவைகளை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இணைய வழியில் பெற வழிவகை செய்துள்ளார்கள். மேலும் கலைஞர் அவர்களின் வழியில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், பெண்கள் பட்டா கேட்டுவரும்போது, தாமதிக்காமல் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள். குறிப்பாக தமிழ்நாடு நில சீர்திருத்தச் சட்டத்தில் குடும்பம் என்ற வரையறை உள்ளது. அதில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை கிடைக்கும் வகையில் திருமண ஆகாத மகள்கள், திருமணம் ஆகாத பேத்திகள் என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குடும்பச் சொத்துகள், ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கும் நிலையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி உள்ளார். பூமிதான இடத்தில் வசிப்போருக்கும் பட்டா வழங்கப்படும் என நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதற்கான அவருக்கும், துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு எண்ணற்ற திட்டங்களை நம்முடைய அரசு செயல்படுத்தி வருகிறது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற உடனே அறிவித்த முதல் திட்டம் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை. இதுவரை 300 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கிறார்கள். அதேபோல புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத்திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மகளிருக்கான உரிமைத் தொகையானது பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் இருந்து வழங்கப்படும் என நம்முடைய முதலமைச்சர் அறிவித்துள்ளார். முதலமைச்சர் சொல்வதுபோல இந்த அரசு, சொன்னதையும் செய்யும் சொல்லாததையும் செய்யும் அரசாக செயல்பட்டு வருகிறது" என்றார்.