Tamilnadu

”அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் உயர்கல்வி”: இதுதான் தமிழ்நாடு அரசின் இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் "அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்.(IITM)" திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 250 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்னதமான நோக்கம் கொண்ட திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது.

எதன் பொருட்டும் எவருக்கும் எந்த வாய்ப்பும் தடுக்கப்படக் கூடாது -அனைவர்க்கும் அனைத்து வாய்ப்புகளும் திறந்திருக்க வேண்டும் - என்ற அடிப்படை முறையை ஆட்சி நெறிமுறையாகக் கொண்ட அரசு இது. எனவே தான் கல்வித் துறையில் அதிகமான கவனத்தைச் செலுத்துகிறோம்.

கல்வி என்பது அனைவருக்கும் சமமாகக் கிடைத்தால் அடுத்தடுத்து அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் சமமாகப் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லைஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காகவும், பள்ளிகளில் தரமான கற்றல் சூழலை உருவாக்கும் வகையிலும் பல்வேறு வகையான முன்னெடுப்புகளை செய்து வருகிறோம்.

அனைத்துக் குழந்தைகளும் படிப்பதற்கான சிறந்த இடமாக அரசுப் பள்ளிகள் மாறி வருவது பெருமைக்குரியது. அனைவர்க்கும் கல்வி - அனைவர்க்கும் உயர்கல்வி என்பதை இலக்காகக் கொண்டுள்ளது தமிழ்நாடு அரசு.

இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் முதன்மையான கல்வி நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது IITசென்னை. IIT சென்னையில் சேர்ந்து உயர்கல்வி பயில்வதே தம் வாழ்வின் இலட்சியமாக நினைத்து இலட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் கற்றல் திறன்களை மேம்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனம், நம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையிலும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அறிவியல் சிந்தனைகளை வளர்க்கும் வகையிலும் நம் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து உருவாக்கியுள்ள திட்டமே “அனைவருக்கும் IITM”.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டிலுள்ள முன்னணிக் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்வதற்குத் தயார்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். எனது கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் தொடர்ச்சியான முன்னெடுப்புதான் இது.

அனைவருக்கும் IITM திட்டத்தின் முதற்கட்டமாக, IIT சென்னையில் நான்காண்டுப் படிப்பாக வழங்கப்படும் B.S. Data Science and Applications (தரவுப் பயன்பாட்டு அறிவியல்) பட்டப்படிப்பில் சேர தமிழ்நாட்டிலுள்ள 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87மாணவர்களில் 45 மாணவர்கள் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவை அனைத்தும் சேர்ந்து பள்ளிக் கல்வித் துறையில் மாபெரும் அறிவுப்புரட்சிக்கு வித்திட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தி வரும் இது போன்ற திட்டங்களின் தொடர்ச்சியாக தற்போது “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வுத் திட்டம்” என்ற மிக முக்கியமான புதியதிட்டத்திற்கான அறிவிப்பினை இந்த நிகழ்வில் வெளியிட்டு, அறிமுகம் செய்து தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இத்திட்டத்தின் நோக்கம், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்கும் அவர்கள் உயர்கல்வியைத் தொய்வின்றித் தொடர்வதற்கும் உதவி செய்வதே ஆகும்.

இந்த திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்புப் பயிலும் (500மாணவர், 500 மாணவியர்) 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை ஐஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தொடர்பினையும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். அவர்களுடைய பன்னிரண்டாம் வகுப்பினை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000/-வழங்கப்படும். இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுடைய இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பை தொடரும் போதும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000/- வீதம் உதவித் தொகையும் பெறுவர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது உரையைத் தொடங்கும் போது நான் சொன்னேன்... எதன் பொருட்டும் ஒருவரது வாய்ப்பு பறிபோகக் கூடாது என்று சொன்னேன்.

அரசு பள்ளியில் படிக்கும் நமக்கு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இணையான தனிப்பயிற்சிகள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எவருக்கும் இருக்கக் கூடாது. அதற்காகத் தான் இந்தத் திட்டம் ஆகும்.

சமூக அமைப்போ - பொருளாதார நிலைமையோ - அவர்களது வளர்ச்சியைத் தடுக்கக் கூடாது. பெண் என்பதற்காக பள்ளிப் படிப்போடு அவர்களது கல்வி நிலை சுருக்கப்படக் கூடாது.இத்தகைய சமூக அநீதிகளைக் களைவது தான் சமூகநீதியாகும்.

இடஒதுக்கீடாக இருந்தாலும் - கல்வி உதவித் தொகைகளாக இருந்தாலும் தரப்படுவதற்கு இதுதான் காரணம். இது போன்ற சமூகநலத்திட்டங்களின் காரணமாகத் தான் சமூகமும் வளர்ந்துள்ளது. நாடும் வளர்ந்துள்ளது.

சமூகத்தின் அனைத்துத் தரப்பின் அறிவு சக்தியும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு கல்வி - அறிவியல் பூர்வ கல்வி - பகுத்தறிவுக் கல்வி வேண்டும். இக்கல்வியானது வேலைக்குத் தகுதிப்படுத்துவதாக மட்டும் இருக்கக் கூடாது.

அந்த மாணவனை தன்னம்பிக்கை உள்ள மனிதனாகத் தகுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் அறிவாற்றலை மட்டுமல்ல - மன ஆற்றலையும் உருவாக்குபவைகளாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாணவர் திறனறித் தேர்வுத் திட்டத்தை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் கேட்டு விடை பெறுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: நானும் டெல்டா காரன்தான்.. நிலக்கரிச் சுரங்கம் அமைக்க அரசு அனுமதி அளிக்காது: பேரவையில் முதலமைச்சர் உறுதி!