Tamilnadu

கேபிள் ஒயரில் ஈரத் துணிகளை காயவைத்த இளம்பெண்.. மின்சாரம் தாக்கி கேபிள் ஆபரேட்டர் மனைவிக்கு நேர்ந்த சோகம்!

திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெரும்புதூர் பகுதியில் இருக்கும் வராதபுரத்தில் வசித்து வருபவர் நாகராஜ் (45). அந்த பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக இருக்கும் இவருக்கு கீர்த்தனா (30) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கீர்த்தனாதான் வழக்கமாக துணிகளை துவைத்து காயவைப்பார்.

அந்த வகையில் கடந்த சனிக்கிழமையும் மனைவி கீர்த்தனா அனைவரது துணைகளையும் துவைத்துள்ளார். பின்னர் காயவைக்க சென்ற அவருக்கு அங்கு இடம் போதவில்லை. இதனால் அங்குள்ள சுவர் ஓரம் இருந்த கேபிள் ஒயரில் காய வைத்துள்ளார். அப்போது அதில் இருந்த மின்சாரம் கம்பி மூலம் கீர்த்தனாவின் உடலில் பாய உடனே கீழே சுருண்டு விழுந்துள்ளார்.

இவரது அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் கீர்த்தனாவை மீட்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்க பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கீர்த்தனாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேபிள் ஒயரில் துவைத்த துணிகளை காய வைக்கும்போது மின்சாரம் தாக்கி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளது திருவள்ளூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அடிக்கடி விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து அரசு தரப்பில் இருந்தும், மருத்துவர்கள் மத்தியில் இருந்தும் பல அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் அதனை பெரிதாக எண்ணாமல் இருந்து வருகின்றனர். அதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Also Read: திருமணத்திற்கு பரிசாக வந்த Home Theatre-ஆல் இடிந்து விழுந்த வீடு: புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்!