Tamilnadu

விடுதலை படம் வெளியான திரையரங்கில் வாக்குவாதம்.. வளர்மதி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன் நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்திற்கு ‘ஏ’ அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் திரையரங்குகளில் 18 வயது குறைவாக உள்ள குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் ஐனாஸ் திரையரங்கில் விடுதலை படம் திரையிடப்பட்டிருக்கிறது.

இப்படத்தை காண நேற்று காலை விருகம்பாக்கம் ஐநாக்ஸ் திரையரங்கில் விடுதலை திரைப்படம் பார்ப்பதற்காக சென்ற பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் நிறுவனர் வளர்மதி என்ற பெண், குழந்தைகளை அனுமதிக்கவில்லை எனக் கூறி திரையரங்கு நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து திரையரங்க மேலாளர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், வளர்மதியிடன் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது போலிஸாருடன் வளர்மதி வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து திரையரங்கில் பிறருக்கு இடையூறு ஏற்படுத்துவதாக மேலாளர் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலிஸார் வளர்மதி மீது அத்துமீறி பிரச்சனையில் ஈடுபடுதல், பொது இடத்தில் பிரச்சனையில் ஈடுபடுதல், சினிமா சட்டம் 1952 உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் விருகம்பாக்கம் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Also Read: அரச ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டம் வென்றதா ? -எப்படி இருக்கிறது 'விடுதலை' திரைப்படம் ?