Tamilnadu
“ரியல் எஸ்டேட் அதிபருக்கு டார்கெட்.. 5½ பவுன் தங்கம், 2 லட்சம் பணம் பறித்த பெண்கள் கைது” : போலிஸ் அதிரடி!
திருப்பூரில் வசித்து வருபவர் சந்திரன் (46). இவர் திருப்பூர் பல்லடம் சாலை டி.கே.டி மில் என்ற பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். வீடு, நிலம் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி பொங்கலூர் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் கலாராணி, சுமதி ஆகிய இருவரும் சந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பொங்கலூர் கரட்டுபாளையத்தில் குறைந்த விலையில் சொகுசு பங்களா விற்பனைக்கு உள்ளது.
அதனை வாங்கி விற்பனை செய்தால் இரண்டு மடங்கு கொள்ளை லாபம் கிடைக்கும் எனவும், நேரில் வந்து பார்க்கவும் வீட்டுக்கு வாருங்கள் முழு விவரங்களையும் பேசிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சந்திரன் பெண்கள் இருவரும் குறிப்பிட்ட இடத்திற்கு தனது காரில் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த இரு பெண்களும் சந்திரனை வீட்டுக்குள் சென்று அறைகளை சுற்றி பார்க்குமாறு கூறியுள்ளனர். அதனையடுத்து பங்களாவுக்கு சென்ற சந்திரனை அங்கு மறைந்திருந்த 3 வாலிபர்கள் அறைக்கு அடைத்து வைத்து, கட்டையால் அடித்து உதைத்து சந்திரன் அணிந்திருந்த 5½ பவுன் தங்க சங்கிலியையும், கையில் வைத்திருந்த 2 லட்சம் பணத்தையும் பறித்து கொண்டனர்.
மேலும் இது குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். மேலும் சந்திரனை அங்கேயே விட்டு சென்ற பெண்கள் உட்பட 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து பணத்தையும், நகையையும் பறி கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் சந்திரன் அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிபாளர் சஷாங் சாய் உத்தரவின் பேரில், பல்லடம் டி.எஸ்.பி செளமியா தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பொங்கலூர் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த கலாராணி, சுமதியை சில நாட்களுக்கு முன்பு அவினாசிபாளையம் போலிஸார் கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், திருப்பூர் கல்லாங்காடு பகுதியில் பதுங்கியிருந்த சுபாஷ் (30), கார்த்தி (32), சிலம்பரசன் (30) ஆகியோரை தனிப்படை போலிஸார் கைது செய்தனர்.
கைது செய்தவர்களிடமிருந்து 2 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்ட நிலையில் மீதி உள்ள நகை,பணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் எனக்கூறி ரியல் எஸ்டேட் அதிபரை வரவழைத்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!