Tamilnadu

“மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை - இது ஒரு மாதத்தில் நடந்த 3 சம்பவம்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் 12.03.2023 அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட தூதரக வழிமுறைகள் வழியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 12.03.2023 அன்று இரண்டு விசைப்படகுகளுடன் (பதிவு எண்: IND-TN-08-MM-81 மற்றும் IND-TN-06-MM-7818) சிறைபிடிக்கப்பட்டதை பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள முதலமைச்சர் அவர்கள், இந்திய மீனவர்கள் இவ்வாறு இலங்கையைச் சேர்ந்த சிலர் / இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த மூன்றாவது சம்பவமாகும் என்றும் பிரதமர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், அடிக்கடி நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக்குகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது முந்தைய கடிதங்களில், இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், வெளியுறவுத் அமைச்சர் அவர்களும் இந்த விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் பிரதமர் அவர்கள் உடனடியாக இதில் தலையிடவேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு மீனவர்களின் 102 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும், இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன்பிடிப் படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திட தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியப் பிரதமர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியள்ளார்.

Also Read: “நஞ்சற்ற வேளாண்மை - மண் வளத்தை பாதுகாக்க Organic Farming Policy வெளியீடு” : முக்கிய அம்சங்கள் என்னென்ன ?