Tamilnadu

அரசு மற்றும் தனியார் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.74 லட்சம் மோசடி.. பிரபல நடிகையின் தங்கை கைது!

சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஷோபா. இவர் பிரபல நடிகை அல்போன்சாவின் தங்கை. ஷோபா வளசரவாக்கத்தில் 'ஸ்ப்லாஷ் கஸ்டமர் சர்வீசஸ்' என்ற பெயரில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிறுவனம் மூலம் மலேசியா, சிங்கப்பூர், துபாய், கனடா உள்ளிட்ட நாடுகளில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்று விளம்பரம் செய்துள்ளார். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களின் தொலைபேசி எண்களை இணையத்தில் எடுத்து அவர்களை தொடர்பு கொண்டு வெளிநாட்டில் உங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வாங்கி தரப்படும். இதற்கு நான் கியாரன்டி என அவர்களிடம் பேசியுள்ளார்.

இவர் பேசியதை உண்மை என நம்பியவர்களிடம் விசா, விமானக் கட்டணம் என ரூ.1 லட்சம் முதல் 10 லட்சம் வரை பணம் வசூல் செய்துள்ளார். ஆனால் அவர் கூறிய படி யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை.

இது குறித்து ஷோபாவிடம் அவர்கள் கேட்டபோது, உங்களுக்கு விரைவில் ஆஃபர் லெட்டர், விசா கிடைத்துவிடும். இதற்கான வேலைதான் நடந்துகொண்டிருக்கிறது என கூறியுள்ளார். இதன் பிறகும் இவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

இதனால் பணத்தைக் கொடுத்தவர்கள் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.74 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் ஷோபாவை கைது செய்து மேலும் யார் யார் இடம் மோசடி செய்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகையின் தங்கை இப்படி மோசடியில் ஈடுபட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்பட்டதாக வீடியோ.. நடிகர்களை வைத்து வீடியோ எடுத்த YouTuber மேல் வழக்கு !