Tamilnadu

மலேசியாவில் இருந்து பிளாஸ்டிக் கூடையில் பயணி கொண்டுவந்த விஷ பல்லி.. பதறிப்போன சென்னை விமான நிலையம்!

மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி பெரிய பிளாஸ்டிக் கூடைகள் இரண்டு வைத்திருந்தார். இதைச் சுங்கு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், அபூர்வ வகை வெளிநாட்டு விலங்குகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

ஒரு கூடையில், "தேகு லிஷார்டு" எனப்படும் ராட்சத விஷ பல்லி குட்டிகள் 4 இருந்தன. இந்த ராட்சத பல்லி வகைகள் பிரேசில், தென் அமெரிக்கா, வட அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் அடர்ந்த வனப் பகுதிகளுக்கு வசிப்பவையாகும். மற்றொரு கூடையில் "ரக்கூண்" எனப்படும் ஒருவகை குள்ள நரி விலங்கு, ஒன்று இருந்தது. இந்த விலங்கு வட அமெரிக்கா வனப்பகுதியில் வசிப்பவை.

அதிகபட்சம் இரண்டரை அடி உயரம் வளரக்கூடியவை. ஆனால் எடை 5 கிலோவில் இருந்து 26 கிலோ வரை இருக்கும். இது கொடூரமாகத் தாக்கும் தன்மையுடையது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்த 5 அரிய வகை விலங்குகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு, போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் வந்து பார்வையிட்டு, இந்த 5 விலங்கும் ஆபத்தானவை. மேலும் நோய்க்கிருமிகள் அதிகமாக இருக்கக் கூடியவைகள். இதனால் இந்த விலங்குகளை நம் நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது. இந்த விலங்குகளை மீண்டும் மலேசிய நாட்டிற்கு எந்த விமானத்தில் வந்ததோ அதே விமானத்தில் திருப்பி அனுப்ப வேண்டும். அதற்கான செலவுகளை, விலங்குகளைக் கடத்தி வந்து கைது செய்யப்பட்டுள்ள பயணியிடம் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதை அடுத்து சுங்க அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, அபாயகரமான இந்த விலங்குகளை மலேசியாவில் இருந்து சட்ட விரோதமாகக் கடத்தி வந்த சென்னை பயணியைக் கைது செய்தனர். அதன்பின்பு இந்த ஐந்து விலங்குகளையும் இன்று மதியம் சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பிவைத்தனர்.

Also Read: மக்களே உஷார்.. உலகம் முழுவதும் பரவும் புது வகை வைரஸ்: எழுத்தாளர் எச்சரிக்கை பதிவு!