Tamilnadu

“22 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்.. ரூ.10 லட்சம் மதிப்பிலான சீர் வரிசைகள்”: அசத்தும் இந்து அறநிலையத்துறை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஏழை ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

அதன்படி திருப்பூர் இணை ஆணையர் மண்டலத்துக்குட்பட்ட கரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 13 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் அந்தந்த மணமக்களின் உறவினர்கள் முன்னிலையில் 13 ஏழை ஜோடிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 13 ஏழை ஜோடிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா மற்றும் மணமக்கள், உறவினர்களுக்கு விருந்து வழங்கும் விழா கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு அறநிலையத்துறை திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமரதுரை தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலைத்துறை கரூர் உதவி ஆணையர்கள் நந்தகுமார், ஜெயதேவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தொழிதிபர்கள் தியாகராஜன், பாலமுருகன் , ராமசாமி, ஆகியோர் மணமக்களுக்கு 18 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினர். இந்துசமய அறநிலையத்துறை கோயில்களில் நடத்தப்பட்டு வந்த இலவச திருமணத்துக்கு ஒரு இணைக்கான திட்ட செலவினம் ரூ.20 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது, அந்த தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி தாலிக்கு 4 கிராம் தங்கம் மணமகன் ஆடை, மணமகள் ஆடை, இருவீட்டார் தரப்பில் 20 பேருக்கு உணவு, மாலை, பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கைக்கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் என ரூ.50 ஆயிரத்திற்கான பொருட்கள் வழங்கப்படுவதாக இணை ஆணையர் குமரதுரை தெரிவித்தார்

விழாவில் கோவில் ஆய்வாளர்கள், பணியாளர்கள், கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் கோவிலில் உள்ள கலையரங்கத்தில் 8 ஜோடிகளுக்கும் மற்றும் படவேடு ரேணுகாம்பாள் கோவில் 1 ஜோடிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மாங்கல்யம் வழங்கி இலவச திருமணத்தை நடத்தி வைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகளை வழங்கினார்.

Also Read: தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டி கலவரபூமியாக மாற்ற சதித்திட்டம்: பாஜக - சனாதன கும்பலுக்கு எதிராக போராட்டம்!