Tamilnadu

“விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவதுதான் அவருக்கு வேலையே..” -வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

கோயில்களிலேயே யானைகளின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்வதால் தனியாக யானைகள் புத்துணர்வு முகாம் என்பது தேவையற்றது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார்.

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள கல்யாணி யானைக்கு ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குளியல் தொட்டியை தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, "கடந்த 2006-ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் துவக்க அரசாணை வெளியிட்டார். பின்னர் 2007-ம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் துவங்கப்பட்டது. கடந்த காலங்களில் பள்ளிகள் மாணவர்கள் பயிற்சி பெற தரம் இல்லாத நிலை இருந்தது.

இந்த பள்ளிகளை மேம்படுத்தவும், புதிய பள்ளிகள் துவக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து, 5 நிலையில் பயிற்சி பெற 15 பள்ளிகள் துவங்கப்பட்டது. அப்பள்ளிகளில் 210 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். எங்கும் தமிழ் மணம் மகிழவும், ஆன்மிகத்தில் தமிழ்நாடு முதன்மை பெறவும் இந்த நிகழ்ச்சி உதாரணமாக உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 27 திருக்கோவிலில் 29 யானைகள் பராமரிக்கப்படுகிறது. அந்த யானைகளுக்கு குளியல் தொட்டிகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர் பரிந்துரைப்படி உணவு வழங்கப்படுகிறது. இந்த அரசு மனிதர்கள், யானைகள் நலன் காக்கும் அரசாக உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையில் இருந்த தொய்வான நிலையை அகற்றி, பக்தர்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி வருகிறது" என்றார்.

தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பழநி தண்டாயுதபாணி திருக்கோவில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, "ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக விஷமத் தனமான செய்திகளை வெளியிடுவது தான் அவரது வாடிக்கையாக உள்ளது.

வெளிநாட்டில் இருப்பவர்களும் பாராட்டும் வகையில் சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்தது. அதில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டும் என அர்த்தமற்ற செய்தியை வெளியிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கியதாலும் திருக்கோவிலை வைத்து வருமானம் பார்ப்பவர்களை முடக்கியதாலும் தேவையற்ற செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது" என்றார்.

Also Read: "சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் ஒன்றிய அரசு": மக்களவையில் அனல் பறக்க பேசிய கனிமொழி MP!