Tamilnadu

அமைச்சர் உதயநிதி முன்னிலையில் ஒடிசா விளையாட்டுத்துறை அமைச்சகத்துடன் ஒப்பந்தம்: அதன் 5 சிறப்புகள் இதோ!

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒடிசா மாநில விளையாட்டுத்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

15-வது ஹாக்கி உலக கோப்பை போட்டிகளைக் காணவும், அம்மாநில விளையாட்டு கட்டமைப்புகளை பார்வையிடவும் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நேற்று ஒடிசா மாநில விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகளுடன் விளையாட்டு மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தமானது, இளம் திறமையாளர்கள் , பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு விஞ்ஞானிகள் ஆகியோரின் திறமைகளைப் பரிமாறிக்கொள்ள உதவும். இது இரு மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு உள் கட்டமைப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும்

வழி வகுக்கும். இதனால் உலக தரம் வாய்ந்த வகையில் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், சர்வதேச விளையாட்டு அகாடமிகள் , விளையாட்டு கல்விக் கூடங்கள், சிறப்பு மையங்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் பிற நவீன வசதிகளை உருவாக்கிடவும் , உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர் களை உருவாக்கிடவும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்திடவும் இரு மாநிலங்களும் முறையான ஒத்துழைப்பு வழங்கும்.

இந்நிகழ்ச்சியில் ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் டர்கி பொருளாளர் சேகர் மனோகரன், ஒடிசா மாநில விளையாட்டுத்துறைச் செயலர் வினில் கிருஷ்ணன், ஒடிசா மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் மதிவதனன் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

Also Read: 'மக்களைத் தேடி மருத்துவம்'.. புள்ளி விபரங்களுடன் EPS-க்கு தரமான பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!