Tamilnadu

புதிய செல்போன் வாங்க பள்ளி கணினிகளை திருடிய 2 கல்லூரி மாணவர்கள்: போலிஸில் சிக்கியது எப்படி?

புதுச்சேரி அருகே திருவாண்டார்கோயில் கிராமத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அருகே இருக்கும் கிராமங்களைச் சேர்ந்த சிறுமிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் உள்ள துணை தலைமை ஆசிரியர் அலுவலகத்திலிருந்த கணினிகள் காணாமல் போய் உள்ளது. பிறகு இது குறித்து போலிஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருவாண்டார்கோயில் கடை வீதியில் சந்தேகத்திற்கு இடமாகத் தலையில் சாக்குப்பையைத் தூக்கிக் கொண்டு இரண்டு வாலிபர் நடந்து சென்றுள்ளனர்.

இதைப்பார்த்த போலிஸார் இருவரையும் அழைத்து சாக்குப்பையைத் திறந்து சோதனை செய்தனர். அப்போது, அதில் மானிட்டர், சிபியூ, ஸ்பீக்கர்கள் இருந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் பள்ளியில் திருடப்பட்ட கணினி என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி படித்து வரும் செல்வா என்ற மாணவரும், மற்றொருவர் 18 வயதுக்குக்கீழ் உள்ள சிறுவன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் புதிய செல்போன் வாங்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதனால் அரசு பள்ளிக்குள் நுழைந்து கணினியைத் திருடியுள்ளனர். இதையடுத்து திருடிய கணினியை விற்க சென்றபோது இருவரும் போலிஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளனர். இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தனியே நடந்துசென்ற ஆணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பெண்கள்.. பஞ்சாபில் அதிர்ச்சி!