Tamilnadu

108 ஆம்புலன்ஸில் பழங்குடிப் பெண்ணுக்கு பிறந்த அழகிய பெண் குழந்தை.. கொட்டும் மழையில் நெகிழ்ச்சி !

கொட்டும் மழையில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலே பெண் குழந்தை பிறந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது. மாவட்டந்தோறும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதலில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட சேவைகள் விரைவில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சீலியூர் நீலாம்பதி என்ற கிராமத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் மருதன் - சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஏற்கனவே 5 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், சித்ரா இரண்டாவதாக கர்ப்பம் தரித்தார்.

இவருக்கு இந்த மாதம் பிரசவ தேதியும் மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் ஆங்காங்கே பெரும் கனமழை பெய்து வந்த நிலையில், நேரு இரவு இவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சித்ராவை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டனர். பிறகு ஆம்புலன்ஸின் உதவியாளர் பாலமுருகன் மற்றும் ஓட்டுநர் அமுதன் ஆகியோரின் உதவியுடன் சித்ராவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், இரவு 11:30 மணி அளவில் சித்ராவை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

ஆனால் போகும் வழியிலேயே சித்ராவுக்கு பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி அவருக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்க நேரிட்டது. அப்போது அவருக்கு ஆம்புலன்சில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து தாய் - சேய் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு முதலுதவிக்காக சீலியூர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து, அவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர். இந்த நிகழ்வு அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 18 ஆண்டுகளாக விமான நிலையத்திலேயே வாழ்ந்த பிரபலம்.. வினோத மனிதருக்கு இறுதியில் நடந்த சோகம் !