Tamilnadu

பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 5 பேர் பலி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: ரூ.5 லட்சம் நிதியுதவி!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை என்ற கிராமம் உள்ளது. இங்கு உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் வேலைபார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இந்த தொழிற்சாலையில் வழக்கம்போல் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது தொழிற்சாலைக்குள் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அம்மாசி, அல்லரசு, கோபி, விக்கி, பிரேமா ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் 10க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வெடி விபத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

செய்தி அறிந்தவுடன் அமைச்சர் பி.மூர்த்தியை மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளேன். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இச்சம்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”இனி ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர் கிடையாது ” - அவசரச் சட்டம் கொண்டுவரும் கேரள அரசு !