Tamilnadu

கனடாவுக்கு கொரியர் அனுப்பனுமா? .. பெண் மருத்துவரிடம் 8 லட்சம் மோசடி செய்த வடமாநில கும்பல் அதிரடி கைது !

சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் மருத்துவர் ரெஜீனா என்பவர் கனடாவில் வசித்து வரும் தனது மகளுக்கு சில பொருட்களை அனுப்பி வைப்பதாக கூறியிருந்தார். இதற்காக இணையதளத்தில் கனடாவில் டெலிவரி செய்யும் கொரியர் நிறுவனங்கள் குறித்து தேடியபோது பிரபல நிறுவனமான ப்ளூ டார்ட் நிறுவனத்தின் டோல் எண் என ஒரு எண் வந்துள்ளது.

இதைப்பார்த்ததும் உண்மையான அந்த நிறுவனத்தின் டோல் எண் எனக் கருதிய அந்த பெண் அதனை தொடர்பு கொண்டு கனடாவிற்கு கொரியர் அனுப்பவேண்டும் என்று கூறியுள்ளார். உடனடியாக அனுப்பவேண்டிய பொருள்கள் மற்றும் வங்கி கணக்கு, யுபிஐ விவரங்கள் ஆகியவற்றை அதில் பேசிய நபர் கேட்டுள்ளார்.

அதனை ரெஜினா அனுப்பிய நிலையில், யுபிஐ ஐடி மற்றும் பாஸ்வேர்டு மற்றும் ஓடிபி எண் ஆகியவற்றை அவர்கள் கேட்ட நிலையில், அதையும் ரெஜினா அனுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் என எட்டு நாட்களுக்குள் சுமார் 8 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரது வங்கி கணக்கில் இருந்து அந்த மர்மநபர்கள் எடுத்துள்ளனர்.

முதலில் இதை கவனிக்காத அவர் பின்னர் இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலிஸார் இந்த மோசடியில் ஈடுபட்ட டோல் ஃப்ரீ எண், முகவரி ஆகியவற்றை வைத்து ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஷம்ஷாத் அன்சாரி, இக்பால் அன்சாரி, ஷக்பாஸ் அன்சாரி ஆகிய மூவரை கைது செய்தனர்.

Also Read: மகளை கால்வாயில் தள்ளி ஆணவக்கொலை செய்த தந்தை.. தாய் மூலம் வெளிவந்த உண்மை.. கர்நாடகாவில் அதிர்ச்சி !