Tamilnadu

ஒரே பிரசவத்தில் பெற்ற 3 குழந்தைகளை கைவிட்ட பெற்றோர் : உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் !

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ஒருவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன.

கூலித்தொழிலில் ஈடுபட்டு வரும் அந்த தம்பதியர், பிறந்த மூன்று குழந்தைகளையும் பராமரிக்க முடியாது என்று சேலம் அரசு மருத்துவமனையில் தெரிவித்ததை தொடர்ந்து, அந்த மூன்று குழந்தைகளும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் முன்னிலையில் அரசு மருத்துவமனையில் இருந்த அந்த மூன்று பச்சிளம் குழந்தைகளும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைகளின் உடல் நலம், அவற்றின் பராமரிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். பின்னர் 60 நாட்களுக்குள் மனவந்து குழந்தைகளை தம்பதிகள் பெற்றுக்கொள்ளலாம் என அவகாசம் கொடுக்கப்பட்டது.

ஒருவேளை 60 நாட்களுக்குள் குழந்தையை வாங்கவரவில்லை என்றால், சட்டப்படி குழந்தைகளை தத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மூன்று குழந்தைகளும் குழந்தைகள் நல பாதுகாப்பு துறையின் சார்பில் முறையாக பராமரிக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Also Read: பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு.. ‘திதி’ கொடுக்க வந்த இடத்தில் நடந்த சோகம்!