Tamilnadu

விஷ வண்டு தாக்குதல்.. ஆபத்தான நிலையில் 6 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் கிராமம் !

விஷ வண்டுகள் பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 பேர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்து மருங்கூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள, பண்ண மேடு பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் திடீரென நுழைந்த ஆயிரக்கணக்கான 'கதண்டுகள்' என சொல்லப்படும் விஷ வண்டுகள், அந்த பகுதியிலுள்ள வீடு மற்றும் தெரு பகுதிகளில், நுழைந்துள்ளது. மேலும் அது அங்கிருந்த, ஆண்கள், பெண்கள் மற்றும் ஆடு, மாடுகளை கூட விடாமல், துரத்தி துரத்தி கடித்துள்ளது.

இந்த விஷ வண்டு தாக்குதலில் பயந்துபோன பண்ணமேடு பகுதி மக்கள், வண்டிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்ல முயன்றனர். இருப்பினும் அவர்களை அந்த வண்டுகள் விடமால் துரத்தி துரத்தி கடித்துள்ளது. இந்த தாக்குதலில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கோசலை (வயது 65), அருள் (43), வசந்தன் (40) பாக்கியராஜ் (42), மாரியப்பன் (40) மற்றும் எட்டு வயது சிறுவன் முகிலன் உட்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே மயக்கம்போட்டு வீழ்ந்தனர்.

இதையடுத்து அவர்களை கண்ட அப்பகுதி மக்கள், அவர்கள் அனைவரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் அனைவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து விஷ வண்டு தாக்குதல் சம்பவம் குறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Also Read: "என் காருலயே சாய்றியா..?" -6 வயது தெருவோர சிறுவனை எட்டி உதைத்த காரின் உரிமையாளர்.. கேரளாவில் அதிர்ச்சி !