Tamilnadu

பத்திரிக்கையாளர் மரணம்.. சம்பவம் நடந்தது நெடுஞ்சாலைத் துறையின் பகுதியில்.. மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

சென்னையில் பருவமழையை எதிர்நோக்கி நடைபெற்றுவந்த மழைநீர் வடிகால் பணிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் சென்னையில் மழைநீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு காணும் வகையில் 1,366 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பது சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருசில இடங்களில் தடுப்புகள் அமைக்கப்படாத ஒப்பந்ததார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜாபர்கான் பேட்டையில் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலை பகுதியில் நடைபெற்றுவந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலர் இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சியை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், தனியார் நிறுவன ஊழியர் விபத்துக்குள்ளான பகுதி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அது நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் வருவதாகவும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "தடுப்புகளில் குறைபாடுகள் இருந்தால் மக்கள் புகார் அளிக்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள தடுப்புகளில் குறைபாடுகள் இருந்தால் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். தனியார் நிறுவன ஊழியர் விபத்துக்குள்ளான பகுதி மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை. நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதே போல தடுப்புகளில் குறைபாடுகள் குறித்து தகவல் தெரிவித்தால் விபத்துகளைத் தடுக்கலாம்" எனக் கூறியுள்ளார்.

வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தடுப்புகள் இல்லாவிட்டால் 1913 என்ற உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.