Tamilnadu

2 மாதங்களாக நுரையீரலில் சிக்கியிருந்த சப்போட்டா விதை.. அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய அரசு மருத்துவர்கள் !

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்துள்ள செம்பரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மார்ட்டின் மேரி (வயது 58). இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சப்போட்டா பழம் சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பார்த்தவிதாமாக அந்த பழத்தின் விதையை விழுங்கியுள்ளார்.

இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு பிறகு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கே அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவரது வலது பக்கம் நுரையீரலில் சிக்கியிருப்பதாகவும், அதுவும் அடிப்பாகத்திற்கு சென்றுவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து மூச்சுத்திணறல் பிரச்னை காரணமாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு, அங்குள்ள மருத்துவர்கள் மூச்சுத்திணறலுக்கு ஆக்சிஜன் செலுத்தி, கடந்த 15 ஆம் தேதி காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை மருத்துவர் பழனியப்பன், சுந்தர் ராமன் மற்றும் மயக்கவியல் நிபுணர் மருத்துவர் சுரேஷ் தலைமையில் மருத்துவர்கள் சீனிவாசன், அறிவரசன் ஆகியோர் இணைந்து Flexible Bronchoscopy செய்து சப்போட்டா பழ விதை இருக்கும் இடத்தை கண்டறிந்தனர்.

அப்போது தொடர்ந்து 2 மாதங்கள் அந்த விதை ஒரே இடத்தில் இருந்ததால் மூச்சுக்குழாயின் உட்புறம் காயம் ஏற்பட்டு Granulation tissue பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதில் சதை பிடிப்புடன் ரத்தம் வெளியேறுதலும் இருந்து வந்துள்ளதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி Tracheostomy செய்து பார்த்து, அதன் வழியாக Bronchoscopy செய்து, மருத்துவர்கள் உதவியுடன் நுரையீரலில் சிக்கியிருந்த சப்போட்டா பழ விதையை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவர்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் நன்றி தெரிவித்த நிலையில், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் கூறுகையில், "தனியார் மருத்துவமனையில் இதுபோன்ற அறுவைசிகிச்சை செய்தால் ஐந்து முதல் 10 லட்சம் வரை செலவாகும். ஆனால் தற்போது அரசு மருத்துவக்குழு இந்த அறுவை சிகிச்சையை செலவில்லாமல் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.

உணவு சாப்பிடும்பொழுது சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, பார்த்து கவனமாக சாப்பிட வேண்டும். முக்கியமாக சாப்பிடும்போது பேசவும் கூடாது, சிரிக்கவும் கூடாது" என்று கூறினார்.

Also Read: “அராஜகம் செய்துதான் பணம் வாங்கணும்னா அதுவும் நடக்கும்” : கமிஷன் கேட்டு மிரட்டிய அதிமுக கவுன்சிலர் கணவர்!