Tamilnadu

புதிதாக வாங்கிய லாரியில் ரகசிய அறை செட்டப்.. 300 கிலோ குட்கா கடத்தி வந்த கும்பலை தொக்காக தூக்கிய போலிஸ் !

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பல்லடம் டி.எஸ்.பி செளமியா, காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த கண்டெய்னர் லாரியில் 'ஜெயம் பேக்கர்ஸ்' மூவர்ஸ் என எழுதப்பட்டிருந்தது.

வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட பொழுது வாகனத்தின் உள்ளே காலியாக இருந்தது. இது குறித்து ஓட்டுநரிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். வாகனத்தின் உள்ளே சென்று பார்த்த பொழுது வாகனத்தின் வெளிப்புறம் இருந்த நீளத்திற்கும் உள்புறம் இருந்த நீளத்தின் அளவிற்கும் வித்தியாசம் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலிசார் வாகனத்தை முழுவதுமாக சோதனையிட்டனர். அதில் வாகனத்தின் உட்புறம் 3க்கு 8 அடி என்ற அளவில் ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த அறையை திறந்து பார்த்த பொழுது உள்ளே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது.

இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கண்டெய்னர் லாரி திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையை சேர்ந்த டைட்டஸ் என்பவருக்கு சொந்தமானதும், ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கியதும், இன்னும் பதிவு எண் வழங்கப்படவில்லை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து 23 லட்சம் மதிப்பிலான 300 கிலோ குட்கா மற்றும் கண்டெய்னர் லாரியை போலிசார் பறிமுதல் செய்தனர்.

குட்காவை கடத்தி செல்வதற்காகவே கண்டெய்னர் லாரி வாங்கப்பட்டு அதில் ரகசிய அறை அமைத்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஓட்டுனர் லோகேஸ்வரனைக் கைது செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் டைட்டஸ் என்பவரை தேடி வருகின்றனர். கடத்தலுக்காக புதிய கண்டெய்னர் லாரி வாங்கி அதில் ரகசிய அறை அமைத்திருப்பது போலீசாரிடம் மட்டுமின்றி பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ‘இந்தி தேர்வில் தோல்வி..’ பள்ளி சிறுவனை பிரம்பால் அடித்தே கொன்ற ஆசிரியர்.. பாஜக ஆளும் உ.பி-யில் கொடுமை !