Tamilnadu
பாஞ்சாகுளம் விவகாரம் : குற்றவாளிகளுக்கு 6 மாதம் ஊருக்குள் வரத் தடை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் என்ற கிராமத்தில் பட்டியலின மாணவர்கள் சிலர் அங்குள்ள பெட்டிக்கடையில் தின்பண்டம் வாங்குவதற்காக சென்றனர். அப்போது அந்த கடை உரிமையாளர் "உங்களுக்கு தின்பண்டம் வழங்க முடியாது.. ஊர் கட்டுப்பாடு வந்துள்ளது.. உங்கள் தெரு பிள்ளைகள் யாருக்கும் வழங்க முடியாது.." என்று கறாராக கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின் பேரில் கோட்டாச்சியர் சுப்புலட்சுமி முன்னிலையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையை பூட்டி சீல் வைத்தனர்.
மேலும், அந்த கடை உரிமையாளர்களான மகேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையடுத்து தீண்டாமை விவகாரத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள் அந்த கிராமத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள (Externment Provision) பிரிவை பயன்படுத்த தென் மண்டல IG அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தீண்டாமை விவகாரத்தில் குற்றவாளிகள் மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகிய 5 பேரும் ஆறு மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல்முறையாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!