Tamilnadu

இனி பொய் செய்திகளை பரப்பினால் அவ்வளவுதான்- FB,Youtube-ஐ கண்காணிக்க குழு அமைத்து தமிழ்நாடு DGP உத்தரவு!

தமிழ்நாட்டில் சமீப காலமாக சில கும்பல்கள் பொய் செய்திகளை பரப்புவதும், அதன் மூலம் சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு அரசு சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களும் சேதமாகும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. மேலும் சிலர் அரசியல் ரீதியாகவும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து சட்டத்தின் பிடிக்குள் அவர்களை கொண்டுவர தமிழ்நாடு போலீஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து டி.ஜி.பி சைலேந்திரபாபு அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழகம் முழுவதும் மாநகர மாவட்ட காவல்துறையின் சமூக ஊடக குழு தொடங்கப்பட்டுள்ளது. Youtube, twitter, facebook போன்ற சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து வதந்திகளை பரப்பி அதன் மூலம் குழப்பங்களையும் சண்டைகளையும் கலவரங்களையும் காவல்துறைக்கு அவபேரையும் ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கவனிக்க காவல்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இணைய வழியில் பாலியல் குற்றங்கள் போதை பொருள் விற்பனை பண மோசடி போன்ற சைபர் குற்றங்களிலில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டுபிடிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.சென்னை உட்பட 9 மாநகரங்களிலும் 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கணினி சார் திறன், சைபர் தடைய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் தெரிவு செய்யப்பட்டு இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இக்குழு சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமை கீழ் இயங்கும்.

பொய்யான பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்பும் விஷமிகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து அந்த வதந்தி பதிவுகளை நீக்கவும் அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும் கணினி சார்க் குற்ற வழக்குகளை பதிவு செய்வதற்கு இக்குழு துரிதமாக செயல்படும். குறிப்பாக இந்த குழுவானது மேற்கொள்ளும் நடவடிக்கையின் மூலம் சாதி, மத, அரசியல் மோதல்களை தடுக்கவும் இப்பொழுது உதவும்." என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: "காங்கிரஸ் வென்றால் ரூ.500-க்கு சிலிண்டர்.. இலவசக் கல்வி.." -ராகுல் காந்தி அளித்த வாக்குறுதிகள் என்னென்ன?