Tamilnadu

’குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது’.. முதலமைச்சர் உறுதியளித்தாக ஸ்ரீமதியின் பெற்றோர் பேட்டி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பின்னர் ஜூலை 17ம் தேதி நடந்த இப்போராட்டம் திடீரென கலவரமாக மாறியது. அப்போது காவல்துறையின் வாகனங்கள், பள்ளிக்குச் சொந்தமான பேருந்துகள், வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களையும் அடித்துச் சேதப்படுத்தி தீ வைத்து எரித்தனர்.

இந்த கலவரம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்களை போலிஸார் கைது செய்தனர். மேலும் தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கர், ஆசிரியர் ஹரி பிரியா, கீர்த்திகா ஆகியோர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.

இதையடுத்து மாணவியின் தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர், "ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் யாரும் தப்பிக்கக் கூடாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தினோம். அப்போது, நிச்சயம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும்.குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்ததாக" தெரிவித்தனர்.

Also Read: தமிழ்நாடே உற்று நோக்கிய இரண்டு முக்கிய சம்பவங்கள்.. விரிவான விவரங்கள் உள்ளே !