Tamilnadu

"எனது பிறப்பிலேயே திமுக உள்ளது.." - திமுகவில் இணைந்த தேமுதிக மாவட்ட செயலாளர் பனப்பட்டி தினகரன் பெருமிதம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னணியில் மாற்றுக்கட்சியினர் 55,000 பேர் இணையும் விழா நடைபெற்று வருகிறது. இதில் அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் திமுகவில் இணைகின்றனர்.

அந்த வகையில் தே.மு.தி.க., மாவட்ட கழக புறநகர் செயலாளராக இருந்த பனப்பட்டி தினகரன் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்த பிறகு மேடையில் அவர் பேசும்போது, " தே.மு.தி.க., இணைந்த நான், கடந்த 2011 ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது திமுகவில் இணைத்துள்ளேன். நான் மட்டுமல்ல என்னை போல் தேமுதிகவின் நிறைய நிர்வாகிகளும் இணையவுள்ளனர்.

அதே போல், எனது தந்தை 1967-ல் திமுகவில் இணைந்து 1970 முதல் 2005 வரை பனப்பட்டி ஊராட்சியின் செயலாளராக பணிபுரிந்தார். இங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும், நான் திமுகவின் குடும்பத்தில் பிறந்தவன்; எனக்கு இது ஒன்றும் புதிது கிடையாது; எனது பிறப்பிலேயே திமுக உள்ளது.

இந்தியாவுக்கே முன்னுதாரமாக ஆட்சி புரிந்து கொண்டிருக்கிற தமிழகத்தின் முதலமைச்சருடன் இணைந்து பணியாற்ற வந்துள்ளோம். நான் உண்மையில் வியந்து போனேன். கொரோனா காலத்தில் கை குலுக்க பயந்துகொண்டிருக்கும் சமயத்தில், தனது உயிரை துச்சமென மதித்து கொரோனா வார்டுக்குள் சென்ற உத்தம தலைவர் தான் நமது முதல்வர்.

நான் எனது ஊருக்கு பேருந்தில் பயணம் செய்யும்போது, உடன் பயணிக்கும் பெண்கள் கூறுவார்கள் 'முதலமைச்சர் எங்களை இலவசமாக பேருந்தில் கூட்டி செல்வது புண்ணியமாக இருக்கிறது' என்று பெருமிதத்துடன் கூறுவர். அத்தனை பெண்களும் முதலமைச்சரை தெய்வமாக வணங்குகின்றனர்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம்; அப்படி பட்ட விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் கலைஞர் வழங்கியதால், இன்று விவசாயம் செழித்து கொண்டிருக்கிறது. இப்படி பட்ட முதலமைச்சர் தலைமையில் திமுக ஆட்சி 100 ஆண்டுகாலம் நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்

Also Read: முதல்வரை பார்த்து கண்ணீர்விட்டு அழுத மாற்றுத்திறனாளி பெண்:அருகில் சென்று ஆதரவாக பேசிய நெகிழ்ச்சி சம்பவம்!