Tamilnadu

ஒரே இடத்தில் 1,07,069 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் : நாட்டின் மிகப்பெரிய அரசு விழாவிற்கு தயாராகும் கோவை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக கொங்கு பகுதிக்கு சென்றுள்ளார். இதற்காக இன்று இரவு ஏழு மணி அளவில் சென்னையில் இருந்து விமான மூலம் கோவை சென்ற முதல்வருக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரண்டு புறமும் பொதுமக்கள் திரண்டு தங்களின் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். 5 கிலோ மீட்டர் தூரம் திரண்ட மக்கள் கூட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் முதல்வர் வாகனம் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டது.

இன்று இரவு 8.20 மணிக்கு கோவையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை செல்லும் முதலமைச்சர் அங்கு இரவு தங்குகிறார். பின்னர் நாளை கிணத்துக்கடவு பகுதியில் நடக்கும் அரசு விழாவில் 1லட்சத்துக்கு 7 ஆயிரத்துக்கு 62 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் விடுபட்ட திட்டங்களையும் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் ஏராளமான மாற்று கட்சியினர் திமுகவில் தங்களை இணைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

தொடர்ந்து 25-ம் தேதி திருப்பூருக்கு செல்லும் முதல்வர் அங்கு சிறு, குறு சிறுவனங்கள் சார்பில் நடைபெறும் ‘தொழிலுக்கு தோள்கொடுப்போம்’ மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

அதன் பின்னர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஈரோடு செல்லும் முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஏற்கனவே கோவை மாவட்டத்திற்கு செல்ல பயண திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக அந்த பயணம் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: NDTV-யின் 29.18 % பங்குகளை வாங்கிய அதானி.. கார்பரேட் கைகளுக்கு செல்கிறதா மிகப்பெரும் செய்தி நிறுவனம் ?