Tamilnadu
“வங்கிகளில் 4,000 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று மோசடி” : ஆதாரங்கள் - சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு!
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுரானா குழுமத்தில் உள்ள சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் ஆகியவை ஐடிபிஐ வங்கியிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியிடமிருந்தும் பெற்ற, 4000 கோடி ரூபாய் அளவிற்கான கடனை செலுத்தாமல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த நிறுவனங்களுக்கு எதிராக பெங்களூரு சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், அந்த தொகையை சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக கூறி நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ஊழியர்கள் பி. ஆனந்த் மற்றும் ஐ. பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் ஜூலை 13ஆம் தேதி நல்வரும் கைது செய்யப்பட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தினேஷ் சந்த் சுரானா, பி. ஆனந்த் மற்றும் ஐ. பிரபாகரன் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், கைதுக்கு முன்பாக முறையாக நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கவில்லை என்றும், தீவிர குற்றம் என வகைப்படுத்திவிட்டு அமலாக்கத் துறை விசாரிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு, ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
அமலாக்கத் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி அமலாக்கத் துறை என்பதை காவல்துறை இல்லை என்பதால் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்கவில்லை என்றும், கைது செய்த போது காரணங்களை கூறி அதில் மனுதாரர்கள் கையெழுத்திட்டதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாலும், 3986 கோடியே 8 லட்ச ரூபாய் தொடர்புடைய முறைகேடு என்பதாலும் ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, பெரிய அளவிலான தொகை, மனுதாரர்களின் நேரடி தொடர்பு, அமலாக்கத் துறை மேலும் பல ஆவணங்களை திரட்ட வேண்டிய அவசியம், ஆதாரங்களை அழிக்கவும், சாட்சியங்களை கலைக்கவும் வாய்ப்பு போன்ற காரணங்களால் ஜாமீன் வழங்க முடியாது என கூறி, மூவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Also Read
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !
-
கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !