Tamilnadu

"என் சாவுக்கு காரணம் என் காதலன் தான்" - கணவருக்கு கடிதம் எழுதி வைத்து இளம்பெண் தற்கொலை !

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் வேலு - வேதவல்லி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், 9 வயதில் மகளும், 1 வயதில் மகனும் உள்ளனர். வேதவல்லி ஒரு சிறிய நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று வேதவல்லியின் சகோதரி, அவரை காண அவரது வீட்டிற்கு வந்த போது வேதவல்லி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரி அக்கம்பக்கத்தினருக்கும், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் கிடைத்ததன் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வேதவல்லி டைரியில் தனது தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்திருந்தார். அதாவது "என் சாவுக்கு காரணம் என்னுடன் பணிபுரியும் தரணிராஜன் தான். நான் என் கணவனுக்கு துரோகம் செய்துவிட்டேன். எனது இரண்டாவது குழந்தை என் கணவருக்கு பிறக்கவில்லை. ஆனால் தரணிராஜன் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். என் சாவுக்கு காரணமான தரணிராஜனை விட்டுவிடாதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. வேதவல்லி தான் பணிபுரிந்து வந்த இடத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூரை சேர்ந்த தரணிராஜன் என்பவருடன் பழகி வந்துள்ளார். இருவருக்குமிடையே இருந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தரணிராஜன் வேதவல்லியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மீண்டும் மீண்டும் வேதவல்லி தரணிராஜனிடம் இதைப்பற்றி கேட்க, அவர் முழுவதுமாக அவரை தவிர்த்து வந்திருக்கிறார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட வேதவல்லி, தரணிராஜனை பழிவாங்க எண்ணி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து தரணிராஜனை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் வேதவல்லி கூறியது போல், அவரது இரண்டாவது குழந்தை தன்னுடையது இல்லை என்று தரணிராஜன் மறுத்து வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: ஒரு மின்சார ரயில் இன்ஜினில் கூட கழிவறை கிடையாது..ஒன்றிய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு!