Tamilnadu

பாம்பு கடித்து இறந்த சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் : வெளியான பகீர் வீடியோ - முதியவர் போக்சோவில் கைது !

சென்னை, மாதவரம் பகுதியை அடுத்துள்ள சோழவரம் அருகே புதிய எருமைவெட்டிபாளையம் கிராமத்தில் இருக்கும் தனியார் செங்கல் சூளையில் பெண் ஒருவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் தனது தம்பி மற்றும் அவரது மனைவி இறந்ததால், அவர்களது மகளை வளர்த்து படிக்க வைத்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி பாம்பு கடித்துள்ளது. சிறுமியை அலறல் சத்தத்தை கேட்டு வந்த சிறுமியின் உறவினர்கள், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் உடலை உடற்கூறாய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிறுமி இறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில், சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியானது. பின்னர் இந்த வீடியோ குறித்து சிறுமியின் உறவினர்கள் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், புதிய எருமைவெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் (எ) சின்னதுரை, பாஸ்கர், சதீஷ், ரமேஷ், விஜயகுமார் ஆகிய 5 பேரும் வீடியோவை மறைவாக நின்று எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து விசாரித்ததில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் பாலு என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர் பாலு, மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த 5 பேர் உள்ளிட்ட 6 பேர் மீதும் போக்ஸோ வழக்கு, ஐ.டி ஆக்ட் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவரின் செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “அண்ணியை சுத்தியால் அடித்து கொலை செய்த மைத்துனன்” - போலிஸ் விசாரணையில் ‘பகீர்’ தகவல்!