Tamilnadu

காதல் தோல்வியால் MBA பட்டதாரிக்கு நேர்ந்த சோகம்!3 ஆண்டுக்கு பின்னர் உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கன்னியாகுமரி ரெயில்வே ஸ்டேஷன் அருகே கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். அங்கு இருப்பவர்கள் அவ்வப்போது கொடுக்கும் உணவை உண்டு அங்கேயே இருந்த அவர், அங்குள்ள நடைபாதையில் உறங்கி வந்துள்ளார்.

இவர் எப்போதும் ஆங்கில செய்தித்தாள்களை படித்து வந்துள்ளதை அந்த பகுதியில் இருந்தவர்களும் ஆச்சரியமாக பலமுறை பார்த்துள்ளனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் கன்னியாகுமரி பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அந்த குடும்பத்தில் வந்த முருகன் என்பவர் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை பார்த்துள்ளார். அவரை எங்கோ பார்த்ததுபோல இருப்பதை உணர்ந்த முருகன் காணாமல் போன தனது உறவினராக இருப்பாரோ என அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

முதலில் அவரிடம் பேசமறுத்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பேசத்தொடங்கியுள்ளார். அவர் கூறிய தகவலை வைத்து காணாமல்போன தனது உறவினர்தான் என்பதை முருகன் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார்.

பின்னர் இது குறித்து ஊரில் இருக்கும் தனது உறவினர்களிடம் தகவல் தெரிவித்த முருகன், மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை அந்த பகுதியில் இருந்தவர்களோடு சேர்ந்து பிடித்துவைத்துள்ளார். மேலும் 3 ஆண்டுகள் வெட்டாமல் இருந்த அவரின் முடியை கடைக்கு அழைத்து சென்று வெட்டியுள்ளார். பின் அவரை குளிக்க வைத்து புதிய உடையையும் அணிவித்துள்ளார்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர் குறித்து அறிய முயன்ற நிலையில், அவர்களிடம் மனநலம் பாதிக்கப்பட்டவர் யார் என்பதையும் முருகன் கூறியுள்ளார். அதன்படி அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தென்காசி மாவட்டம் தென்மலை பகுதியைச் சேர்ந்த முத்து என்பதும், ராஜபாளையத்தில் பி.காம் முடித்து சென்னை பல்கலைக்கழககத்தில் எம்.பி.ஏ முடித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். பின்னர் காதல் தோல்வி காரணமாக விரக்தியில் இருந்த அவர் கடந்த 2018ம் ஆண்டு காணாமல் போயுள்ளார்.

அவரை பல இடங்களில் உறவினர்கள் தேடிய நிலையில், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலிஸார் தேடியும் கண்டுபிடிக்காத நிலையில், தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரின் உறவினர்கள் வந்து அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

Also Read: "உங்கள் நண்பர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி செய்வதுதான் இலவசம்" - மோடியை விமர்சித்த கெஜ்ரிவால்!