Tamilnadu

மதுரை விமான நிலையத்தில் திடீரென வெடித்த துப்பாக்கி.. பயணிகள் பீதி: நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒன்று மதுரை விமான நிலையம். சென்னை அடுத்தபடியாக மதுரை விமான நிலையத்தில் அரசியல் தலைவர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

இதனால் மதுரை விமான நிலையத்தில் எந்நேரமும் பலத்த பாதுகாப்பு இருக்கும். மேலும் இந்த விமான நிலையத்தில் ஒன்றிய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தினந்தோறும் தங்களது பாதுகாப்புப் பணி முடிந்தபிறகு தங்களது துப்பாக்கியை விமான நிலையத்தில் உள்ள ஆயுத பாதுகாப்பு கட்டடத்தில் ஒப்படைப்பது வழக்கம்.

இதன்படி நேற்று முன்தினம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஆயுத கட்டிடத்தில் ஆய்வாளர் துருவ்குமார் ராய் என்பவர் இரவுபணி முடித்துவிட்டு 9 எம்.எம் தோட்டா வகை துப்பாக்கியை ஒப்படைத்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த துப்பாக்கி வெடித்துள்ளது. இதனால் துப்பாக்கி வெடிச்சத்தம் விமான நிலையம் முழுவதும் எதிரொலித்தால் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்த துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி, ஆய்வாளர் துருவ்குமார் ராயை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 17 ஆண்டுகளில்.. முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய திமிங்கல விமானம்: காரணம் என்ன?