Tamilnadu

"தூங்கி விட்டேனாம்.. அதை பெரிய துக்கமாக பேசுகிறார்கள்" - திருட வந்த இடத்தில் தூங்கிய திருடன்..

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்தவர் ரத்தினவேல். 53 வயதாகும் இவர், அதே பகுதியில் ஒரு மரக் கடையில் வேலை பார்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தாருடன் வெளியூர் சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று வீடு திரும்பிய இவர், தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு இளைஞர் ஒருவர் மது போதையில் நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார். அவரை எழுப்பி யார் என்று விசாரிக்கையில், போதையில் இருந்த இளைஞரால் சரிவர பதிலளிக்க முடியவில்லை.

எனவே உடனே அவனியாபுரம் காவல்நிலையத்தை தொடர்பு கொண்ட வீட்டின் உரிமையாளர் ரத்தினவேல், நடந்த சம்பவத்தை கூறினார். மேலும் தன் வீட்டிலிருந்த 40 கிராம் தங்கத்தை காணவில்லை என புகார் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், போதையில் இருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்போது இவரது பெயர் நடராஜன் என்றும், வயது 21 என்றும், அவனியாபுரம் அருகே உள்ள பழங்கநத்தம் என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து திருட்டு இளைஞர் நடராஜன் மீது ரத்தினவேல் திருட்டு புகார் கொடுத்துள்ளதையடுத்து, நகைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி திருட வந்த இடத்தில் போதையில் தூங்கிய இளைஞரின் செயலால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே பல நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: காணாமல் போன தலை.. அதை சுற்றி நகரும் புலனாய்வு கதை: OTT-யில் வெற்றி பெற்றதா விலங்கு படம்?