Tamilnadu

கொலை முயற்சி.. பாஜகவில் சேர்ந்த அக்யூஸ்ட் ரவுடி சங்கர் மீது வழக்குப்பதிவு - ஸ்கெட்ச் போடும் போலிஸ் !

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பி.ஜி.டி சங்கர். அ.தி.மு.க. ஆட்சியில் பிரபல ரவுடியாக வலம் வந்து முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க.வினரால் படுகொலை செய்யப்பட்ட பி.பி.ஜி குமரனின் வலது கரமாகவும் செயல்பட்டவர்.

இவர் தற்போது பா.ஜ.க கட்சியில் மாநில பட்டியலின பொருளாளராகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார். இவர் மீது திருப்பெரும்புதூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சுங்குவார்சத்திரம், உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் இருங்காட்டுக்கோட்டை அருகே தலைமறைவாக இருந்த வளர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானபிரசாத், சுரேஷ், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ், அன்பரசன், டேவிட்சன் மற்றும் விஜய் ஆகிய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தபோது, அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டு, வீச்சருவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆறு பேரிடமும் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கைதான 6 பேரும் பிபிஜிடி சங்கரிடமே இருந்து கொண்டு தொழிலதிபர்களை மிரட்டுவது, தொழில் நிறுவனங்களை மிரட்டி ஸ்க்ராப் எனப்படும் கழிவு பொருட்களை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு குட்டி தாதாக்களாக வலம் வந்தது தெரிய வந்தது.

அண்மையில் பிபி ஜிடி சங்கருக்கும் குட்டி தாதாக்களின் தலைவனாககருதப்படும் விஜய்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் குட்டி தாதாக்கள் தன்னிச்சையாக வலம் வந்துள்ளனர். மேலும் இவர்கள் ரவுடியாக வலம் வருவதற்கு இடையூறாக இருக்கும் சங்கரை தீர்த்து கட்ட முடிவு செய்து சென்னை குன்றத்தூரை சேர்ந்த பழைய குற்றவாளி ஒருவரிடம் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்வதற்கு பயிற்சி எடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்ததும் போலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பின்னர் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருப்பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே குட்டி தாதாக்களின் கூட்டாளியில் ஒருவரான ராஜ்கிரன் என்பவனை பிபிஜிடி சங்கர் அழைத்து தன்னையே கொலை செய்ய திட்டம் தீட்டினீர்களா என கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் ராஜ்கிரன் புகார் அளித்தார்.

புகாரின் படி காவல்துறையினர் விசாரணை செய்ததை அடுத்து பா.ஜ.க பிரமுகரும் ரவுடியான சங்கர் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். காவல்துறை வழக்கு பதிந்து கைது செய்ய தீவிரமாக தேடி வரும் நிலையில், பாஜக பிரமுகர் பி.பி.ஜி.டி சங்கர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். எனவே தனிப்படை அமைத்து காவல் துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில், திருப்பெரும்புதூரில் தனியார் தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறித்து சொகுசாக இருந்து வந்த பிரபல ரவுடி படப்பை குணா, மற்றும் அவரது கூட்டாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பா.ஜ.க பிரமுகர் பிபிஜிடி சங்கர் மற்றும் அவருடய கூட்டாளிகளான ரவுடிகளை ஒடுக்கும் விதமாக காவல் துறையினர் தீவிரநடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது.

Also Read: சொகுசு காரில் கட்டப்பஞ்சாயத்து.. ரவுடி படப்பை குணாவின் முக்கிய கூட்டாளிகள் 2 பேர் கைது : பின்னணி என்ன ?